இந்திய உருமாறிய கொரோனாவால் திண்டாடும் பிரிட்டன்: தடுப்பூசி செலுத்தலை விரைவுபடுத்த பிரதமர் போரிஸ் ஜான்சன் உத்தரவு
லண்டன்: இந்திய உருமாறிய கொரோனாவால் பிரிட்டனில் பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ள B1617 எனும் உருமாறிய கொரோனா வைரஸ் உலக அளவில் 44 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவிற்கு அடுத்தப்படியாக இந்த வைரஸ் பிரிட்டனில் தான் இந்த வைரஸ் அதிகமாக காணப்படுவதால் இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்ள கடந்த மாதம் பிரிட்டன் தடை விதித்தது. கடந்த ஒரு வாரத்தில் அங்கு இந்திய உருமாறிய கொரோனாவால் மட்டும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகி 1,313 என்ற எண்ணிக்கையை தொட்டுள்ளது. இதனால் 4 பேர் உயிரிழந்துள்ளனர். தடுப்பூசி முதல் டோஸ் 70% மக்களுக்கும் இரண்டாவது டோஸ் 36% மக்களுக்கும் வழங்கப்பட்டுள்ள நிலையில் அதனை விரைவுபடுத்த போரிஸ் ஜான்சன் உத்தரவிட்டார். வீடு வீடாக பரிசோதனை செய்யும் பணிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளது. வரும் 17-ம் தேதி முதல் வெளிநாடு செல்லலாம் போன்ற பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. ஜூன் 21-ம் தேதி முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் முழுவதும் தளர்த்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. ஆனால் கொரோனா பரவல் அதிகரிப்பால் பிரிட்டனில் தளர்வுகள் அளிப்பதில் காலதாமதம் ஆகலாம் என கூறப்படுகிறது.