கொரோனா தொற்றில் இருந்து தப்ப பசு மாட்டின் சிறுநீரை குடிக்கும் பாஜக எம்எல்ஏ

தினகரன்  தினகரன்
கொரோனா தொற்றில் இருந்து தப்ப பசு மாட்டின் சிறுநீரை குடிக்கும் பாஜக எம்எல்ஏ

லக்னோ: கொரோனா தொற்றில் இருந்து தப்பிக்க உத்தரபிரதேசத்தை சேர்ந்த பாஜக எம்எல்ஏ சுரேந்திர சிங் என்பவர், பசு மாட்டின் சிறுநீரை குடித்து வருகிறார். கொரோன வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாக்க தடுப்பூசி போடப்பட்டு வரும்நிலையில், கடந்த ஒன்றரை ஆண்டாக தொற்றில் இருந்து தப்பிக்க புதுபுது ஐடியாக்களை அளித்து வருகின்றனர். இதுபோன்ற சில மருத்துவ முறைகளை கூறுவோரை போலீசார் கைது செய்தும் உள்ளனர். இந்நிலையில், உத்தரபிரதேச மாநில பைரியா தொகுதி பாஜக எம்எல்ஏ சுரேந்திர சிங், ‘பசுவின் சிறுநீரை குடித்து வருவதால், எனக்கு கொரோனா வைரஸ் பாதிக்கப்படாமல் உள்ளேன்’ என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் அவர் பசுவின் சிறுநீரை எப்படி குடிப்பது என்பது குறித்து அவர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி உள்ளது. அந்த வீடியோவில், ‘தினமும் காலையில் பல் துலக்கிய பின்னர், வெறும் வயிற்றில் பசுவின் சிறுநீர் 5 மூடி அளவிற்கு குளிர்ந்த நீரில் கலந்து குடிக்கிறேன். வெறும் வயிற்றில் தான் சிறுநீர் கலவையை குடிக்க வேண்டும். கொரோனா நோயை மட்டுமின்றி, இதய நோய்களையும் பசுவின் சிறுநீர் உதவும்’ என்று தெரிவித்துள்ளார். இவரது கருத்துக்கு பலரும் கண்டனம் தெரிவித்தும், ஆதாரமற்ற தகவல்களை தெரிவிக்க வேண்டாம் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.

மூலக்கதை