அபித் இரட்டை சதம்: பாகிஸ்தான் அணி அபாரம் | மே 08, 2021
ஹராரே: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 2வது டெஸ்டில் அபித் அலி இரட்டை சதம் கடந்து கைகொடுக்க முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் அணி 510 ரன் குவித்தது.
ஜிம்பாப்வே சென்றுள்ள பாகிஸ்தான் அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் பாகிஸ்தான் வென்றது. இரண்டாவது டெஸ்ட் ஹராரேயில் நடக்கிறது. முதல் நாள் முடிவில் முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் அணி 4 விக்கெட்டுக்கு 268 ரன் எடுத்திருந்தது. அபித் (118), சஜித் (1) அவுட்டாகாமல் இருந்தனர்.
இரண்டாம் நாள் ஆட்டத்தில் முதல் இன்னிங்சை தொடர்ந்த பாகிஸ்தான் அணியின் சஜித் கான் (20), முகமது ரிஸ்வான் (21) பெரிய அளவில் சோபிக்கவில்லை. அபாரமாக ஆடிய அபித் அலி இரட்டை சதம் கடந்தார். மறுமுனையில் இவருக்கு ஒத்துழைப்பு தந்த நவுமான் அலி (97) நம்பிக்கை தந்தார்.
முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் அணி 8 விக்கெட்டுக்கு 510 ரன் எடுத்து ‘டிக்ளேர்’ செய்தது. அபித் அலி (215 ரன், 29 பவுண்டரி) அவுட்டாகாமல் இருந்தார். ஜிம்பாப்வே சார்பில் முசரபானி 3 விக்கெட் வீழ்த்தினார்.