சீனாவின் சினோபார்ம் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல்

தினமலர்  தினமலர்
சீனாவின் சினோபார்ம் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல்

ஜெனிவா: சீனாவின் சினோபார்ம் கொரோனா தடுப்பூசிக்கு,அவசர கால பயன்பாட்டிற்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது.

சீனாவின் வூஹான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் முதன்முறையாக கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. அதன்பின், உலக நாடுகள் முழுவதும் பரவியது. தற்போது, வரை உலகம் முழுதும் 15.75 கோடி பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனை தடுக்க உலக ஆராய்ச்சியாளர்கள் போராடி, தடுப்பூசிகளை கண்டறிந்துள்ளனர். ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி, அமெரிக்காவின் மாடர்னா, இந்தியாவின் கோவாக்சின், கோவிஷீல்டு உள்ளிட்ட பல தடுப்பூசிகள் தற்போது பயன்பாட்டில் உள்ளது.

இந்நிலையில், சீனாவின் சினோபார்ம் தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டிற்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது. இதன்மூலம் சீனாவில் தயாரான தடுப்பூசிக்கு முதல்முறையாக உலக சுகாதார நிறுவனத்தின் ஒப்புதல் கிடைத்துள்ளது. அதே சமயம் உலக சுகாதார நிறுவனத்தின் ஒப்புதலைப் பெற்ற 6-வது தடுப்பூசி இதுவாகும். இந்த தடுப்பூசியின் 79 சதவீதம் செயல்திறன் கொண்டுள்ளதாகவும், 3 முதல் 4 வாரங்கள் இடைவெளியில் இரண்டு டோஸ்கள் செலுத்தப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே 22 நாடுகள் இந்த தடுப்பூசியைப் பயன்படுத்தி வரும் நிலையில் உலக சுகாதார அமைப்பும் ஒப்புதல் வழங்கியிருப்பதால், மேலும் பல நாடுகள் இந்த தடுப்பூசிக்கு அனுமதி தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மூலக்கதை