புற்றுநோய் பாதித்த நிலையில் மாஜி கிரிக்கெட் வீரர் கொரோனாவால் பலி

தினகரன்  தினகரன்
புற்றுநோய் பாதித்த நிலையில் மாஜி கிரிக்கெட் வீரர் கொரோனாவால் பலி

ஜெய்ப்பூர்: கொரோனா தொற்று பாதிப்பால் ராஜஸ்தானை சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் பலியானார்.  முன்னாள் ராஜஸ்தான் கிரிக்கெட் அணி வீரரும், ரஞ்சி டிராபி வீரருமான விவேக் யாதவ் (36), கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனா அறிகுறியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனை முடிவில் அவருக்கு தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. தொடர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகள் உள்ளனர். இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘ராஜஸ்தானின் ரஞ்சி அணி வீரரும், அன்பான நண்பருமான விவேக் யாதவ் தற்போது நம்மோடு இல்லை. கொரோனா தொற்றால் அவர் காலமானார். அவரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன். அவரது குடும்பத்தினருக்கு எனது இரங்கல்கள்’ என்று தெரிவித்துள்ளார். மறைந்த விவேக் யாதவ், 18 வயதுடையோருக்கான போட்டிகளில் விளையாடி 57 விக்கெட்டுகளை வீழ்த்தியவர். 2010-11 ரஞ்சி டிராபி இறுதிப் போட்டியில் இடம்பெற்றார். பரோடா முதல் இன்னிங்சில் 4/91 ஐ வீழ்த்தினார். பேட்டிங் வரிசையில் முதல் ஐந்து இடங்களில் இடம்பெற்றார். இவர், ஏற்கனவே புற்றுநோய் பாதிப்பால் சிகிச்சையில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை