கொரோனா நெருக்கடி சூழலில் இந்திய மக்களுடன் மனதார துணை நிற்கிறேன்!: கத்தோலிக்க தலைவர் போப் ஃபிரான்சிஸ்..!!

தினகரன்  தினகரன்
கொரோனா நெருக்கடி சூழலில் இந்திய மக்களுடன் மனதார துணை நிற்கிறேன்!: கத்தோலிக்க தலைவர் போப் ஃபிரான்சிஸ்..!!

வாடிக்கன்: கொரோனா நெருக்கடி சூழலில் இந்திய மக்களுடன் மனதார துணை நிற்பதாக கத்தோலிக்க தலைவர் போப் ஃபிரான்சிஸ் தெரிவித்துள்ளார். கொரோனா 2வது அலையால் இந்தியா மிக மோசமான பாதிப்புகளை கண்டு வருகிறது. நாளுக்கு நாள் தொற்றின் வீரியம் அதிகரித்துக் கொண்டே செல்வதால் இதுவரை இல்லாத நெருக்கடி சூழலை மக்கள் சந்தித்து வருகின்றனர். படுக்கை பற்றாக்குறை, ஆக்சிஜன் தட்டுப்பாடு போன்றவற்றால் மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் உலக நாடுகள் பல இந்தியாவுக்கு உதவி கரம் நீட்டி வருகின்றன. குறிப்பாக இங்கிலாந்து, அமெரிக்கா, ரஷியா, பிரான்ஸ், சிங்கப்பூர், துபாய், ஐக்கிய அரபு அமீரகம், ருமேனியா  உள்ளிட்ட நாடுகள் ஆக்சிஜன் உற்பத்தி செறிவூட்டிகளையும், சேமிப்பு கட்டமைப்புகளையும் வழங்கி உள்ளன. இந்நிலையில், கொரோனா நெருக்கடி சூழலில் இந்திய மக்களுடன் மனதார துணை நிற்பதாக போப் ஃபிரான்சிஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, உலக கத்தோலிக்க தலைவர் போப் ஃபிரான்சிஸ் வெளியிட்டுள்ள செய்தியில், அயராது உழைக்கும் இந்திய மருத்துவர்களுக்கு புகழாரம் சூட்டியுள்ளார். நோயுற்றவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை காட்டிலும் நோயாளிகளை கவனித்துக் கொள்ளும் மருத்துவ ஊழியர்கள் தான் தன் எண்ணத்தில் இருப்பதாகவும் கூறியுள்ளார். கொரோனா நெருக்கடி சூழலில் இந்திய மக்களுடன் மனதார துணை நிற்பதாகவும், உறவுகளை பிரிந்து வாடும் மக்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் என்றும் விடாமுயற்சி, பலம் மற்றும் அமைதி இந்திய மக்களுக்கு கடவுள் கொடுக்க வேண்டும் என வேண்டுவதாகவும் போப் ஃபிரான்சிஸ் தெரிவித்துள்ளார். 

மூலக்கதை