அதிகரிக்கும் ஆக்ஸிஜன் சிலிண்டர் தட்டுப்பாடு: கர்நாடகாவில் மேலும் 15 பேர் பலி
பெங்களூரு: பெங்களூரு கலபுர்கி, பெலகாவியில் 15 பேர் ஆக்ஸிஜன் குறைப்பாட்டால் உயிரிழந்தனர். கர்நாடக மாநிலத்தில் ஆக்ஸிஜன் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. நேற்று முன்தினம் சாம்ராஜ்நகர் 24 பேர் ஆக்ஸிஜன் சிலிண்டர் இல்லாமல் உயிரிழந்தனர். தற்போது 28 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த உயிரிழப்பிற்கு இதுவரை யார் காரணம் என்பது தெரியவில்லை. இருப்பினும் இருவேறு மாவட்ட கலெக்டர்கள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கலபுர்கி அரசு மருத்துவமனையில் கோவிட் கேர் சென்டரில் நேற்று 6 பேர் ஆக்ஸிஜன் சிலிண்டர் இல்லாமல் உயிரிழந்துள்ளனர். இதற்கு அடுத்தப்படியாக அப்சல்புரா தாலுகா அரசு மருத்துவமனையில் 4 பேர் ஆக்ஸிஜன் சிலிண்டர் கிடைக்காமல் உயிரிழந்துள்ளனர். இந்த பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என்று கூறப்பட்டு வரும் நிலையில், பெலகாவி அரசு மருத்துவமனையில் 3 பேர் ஆக்ஸிஜன் பற்றாக்குறைவால் உயிரிழந்துள்னர். இதே போல் பெங்களூரு எலகங்காவில் உள்ள அர்கா மருத்துவமனையில் கொரோனா பிரிவில் சிகிச்சை பெற்று வந்த 2 நோயாளிகள் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக உயிரிழந்தனர். இது குறித்து மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் கூறும்போது; ``45 கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களுக்காக ஆக்சிஜன் நிரப்ப 35 சிலிண்டர் அனுப்பி இருந்தோம். ஆனால் 14 சிலிண்டர் மட்டுமே கிடைத்தது. இதனால் 2 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தெரிவித்துள்ளனர். அதன்படி பெங்களூரு, பெலகாவி, கலபுர்கி ஆகிய மூன்று மாவட்டங்களிலும் சேர்த்து இதுவரை 15 பேர் ஆக்ஸிஜன் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக உயிரிழந்திருப்பதாக மாவட்ட கலெக்டர்கள் தெரிவித்துள்ளனர்.