நூல் விலை உயர்வு எதிரொலி: பனியன் விலை 15% உயர்கிறது: சைமா அறிவிப்பு
திருப்பூர்: நுால் விலை உயர்வை கருத்தில் கொண்டு பனியன் விலை 15 சதவீதம் உயர்த்தப்படுவதாக தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்கம் (சைமா) அறிவித்துள்ளது. தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்கத்தின் (சைமா) தலைவர் வைகிங் ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கை: பனியன் ஆடை தயாரிப்புக்கு தேவையான முக்கிய மூலப்பொருளாகிய நூல் விலை அபரிமிதமாக உயர்ந்து கொண்டே செல்கிறது. இது தவிர இதர மூலப்பொருட்களான பேக்கிங், மெட்டீரியல்கள், எலாஸ்டிக் டேப்ஸ், பாலித்தீன் பை விலை உயர்வு, லாரி வாடகை, வரலாறு காணாத பெட்ரோல் விலை உயர்வு, நிட்டிங், டையிங், பிரிண்டிங், காம்பேக்டிங் போன்ற ஜாப் ஒர்க் கட்டண உயர்வு ஆகிய அனைத்து தரப்பிலும் விலை மற்றும் கட்டணம் உயர்ந்துள்ளது. எனவே, பனியன் தயாரிப்புகளின் விலைகளை கடந்த 1ம் தேதி முதல் 15 சதவீதம் உயர்த்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. வியாபாரிகள், வாடிக்கையாளர்கள் மற்றும் ஏஜென்டுகள் இந்த தவிர்க்க முடியாத விலை ஏற்றத்தை ஏற்று தயாரிப்பாளர்களுக்கு எப்பொழுதும்போல் ஒத்துழைப்பு தர கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.