5 மாநில தேர்தல் முடிந்த நிலையில் பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
5 மாநில தேர்தல் முடிந்த நிலையில் பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பு

சேலம்: நாடு முழுவதும் 5 மாநில தேர்தல் முடிந்த நிலையில்  இன்று பெட்ரோல் 11 காசும், டீசல் 16 காசும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் முறையே ₹92. 54, ₹85. 91 என விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சர்வதேச சந்தையின் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை கணக்கில் கொண்டு பெட்ரோல், டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. இதில், மார்ச் மாதத்திற்கு முன் வரை தொடர்ந்து 6 மாதமாக விலை ஏற்றப்பட்டதால், பெட்ரோல், டீசல் விலை விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துள்ளது.



தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்கம், புதுச்சேரி ஆகிய 5 மாநில தேர்தல் வந்ததால், மார்ச், ஏப்ரல் மாதத்தில் விலையை ஏற்றாமல் நிலையாக வைத்துக் கொண்டனர். இடையில் 6 நாட்கள் மட்டும் மிக சிறிய அளவு விலையை குறைத்தனர்.

கடைசியாக கடந்த ஏப்ரல் 15ம் தேதி பெட்ரோல் 15 காசும், டீசல் 13 காசும் குறைக்கப்பட்டது. இதன்பின், பழைய படி ஒரே நிலையான நிலையில் விலையை வைத்துக் கொண்டனர்.

இச்சூழலில் 18 நாட்களுக்கு பின் இன்று, நாடு முழுவதும் பெட்ரோல் 11 காசும், டீசல் 16 காசும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதனால், சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ92. 43ல் இருந்து 11 காசு உயர்ந்து ரூ92. 54க்கும், டீசல் ரூ85. 75ல் இருந்து 16 காசு உயர்ந்து ரூ85. 91க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதுவே, சேலத்தில் பெட்ரோல் ரூ92. 86ல் இருந்து 11 காசு அதிகரித்து ரூ92. 97க்கும், டீசல் ரூ86. 19ல் இருந்து 16 காசு அதிகரித்து ரூ86. 35க்கும் விற்கப்பட்டு வருகிறது. 5 மாநில தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்த தொடங்கியுள்ளது.

இதனால், வரும் நாட்களில் இன்னும் விலை ஏற்றம் பெறும் சூழல் உருவாகியுள்ளது.


.

மூலக்கதை