குடிமக்கள் ஊர் திரும்ப தடை ஆஸி., பிரதமர் விளக்கம்

தினமலர்  தினமலர்
குடிமக்கள் ஊர் திரும்ப தடை ஆஸி., பிரதமர் விளக்கம்

மெல்போர்ன்:''ஆஸ்திரேலிய குடிமக்கள், இந்தியாவில் இருந்து நாடு திரும்ப முயற்சித்தால், சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும் என்ற உத்தரவு, நாட்டு நலன் கருதி பிறப்பிக்கப்பட்டுள்ளது,'' என, அந்நாட்டு பிரதமர் ஸ்காட் மோரிசன் விளக்கம் அளித்துள்ளார்.

இந்தியாவில், கொரோனா தொற்று பரவல் தீவிரம்அடைந்துள்ளதை அடுத்து, இங்கு, 14 நாட்களுக்கு மேல் தங்கியுள்ள ஆஸ்திரேலிய குடிமக்கள், சொந்த நாடு திரும்ப, அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.'இந்த உத்தரவை மீறி, நாடு திரும்ப முயற்சிக்கும் குடிமக்களுக்கு, ஐந்தாண்டு வரை சிறை தண்டனையும், 37 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும்' என, உத்தரவிடப்பட்டது.இதற்கு, ஆஸ்திரேலிய எதிர்க்கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

'சொந்த நாட்டு மக்களை பாதுகாப்பதை விடுத்து, அவர்களை சிறையில் அடைக்கும் உத்தரவு மிக கடுமையானது' என, விமர்சனங்கள் எழுந்துள்ளன.இது குறித்து, ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் கூறியதாவது:இந்தியாவில் இருந்து நாடு திரும்புபவர்களால், தொற்று எண்ணிக்கை ஏழு மடங்கு உயர்ந்துள்ளது. இந்த கடுமையான முடிவு தற்காலிகமானது தான்.

நாட்டில் உள்ள கொரோனா முகாம்களின் கட்டமைப்புகளை மேம்படுத்தவும், பரிசோதனை வசதிகளை அதிகரிக்கவுமே இந்த உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.ஆஸ்திரேலியாவில், மூன்றாவது அலை உருவா வதை தடுக்கும் நல்ல எண்ணத்தில் தான் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. ஆஸ்திரேலிய குடிமக்கள் பாதுகாப்புடன் நாடு திரும்ப வேண்டும் என்பதையே நாங்கள் விரும்புகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை