தலைவர் பதவியிலிருந்து விலகினார் ராவுல் காஸ்ட்ரோ

தினமலர்  தினமலர்
தலைவர் பதவியிலிருந்து விலகினார் ராவுல் காஸ்ட்ரோ


ஹவானா: கியூபா கம்யூனிஸ்ட் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக, ராவுல் காஸ்ட்ரோ, 89, அறிவித்துள்ளார். இதன் மூலம் கியூபா கம்யூ., கட்சியில், 60 ஆண்டுகளுக்குப் பின், முதன் முறையாக, காஸ்ட்ரோ குடும்பம் சாராத ஒருவர், தலைவராகும் சூழல் உருவாகியுள்ளது.


கரீபியன் கடல் பகுதியில் அமைந்துள்ள கியூபாவில், ஒரு கட்சி ஆட்சி முறை நிலவுகிறது. இங்கு, தலைநகர் ஹவானாவில், ஆளும் கம்யூ., கட்சி மாநாடு நடந்தது. இதில், ராவுல் காஸ்ட்ரோ, ''கட்சி தலைவர் என்ற முறையில், கியூபாவின் முன்னேற்றத்திற்கு பாடுபட்ட திருப்தியுடன், இளைய தலைமுறைக்கு வழிவிட்டு, பதவி விலக முடிவு செய்துள்ளேன்,'' என, தெரிவித்தார். அவர் பேச்சு, உடனடியாக, கியூபா, 'டிவி'யில் ஒளிபரப்பானது. புதிய தலைவர் யார் என்பதை, ராவுல் காஸ்ட்ரோ தெரிவிக்கவில்லை. எனினும், 2019 முதல், கியூபா அதிபராக உள்ள, மிகல் டையஸ் கேனல், 60, கம்யூ., கட்சி தலைவராக பொறுப்பேற்பார் என, எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த, 1959ல், பிடல் காஸ்ட்ரோ தலைமையிலான புரட்சிப் படை, கியூபாவின் சர்வாதிகாரி, புல்ஜென்சியோ பட்டிஸ்டாவை விரட்டி, ஆட்சியை கைப்பற்றியது. 1965ல், பிடல் காஸ்ட்ரோ, கியூபா கம்யூ., கட்சி தலைவர்ஆனார். அதன்பின் கியூபாவின் அசைக்க முடியாத சக்தியாக, 2006ல் நோய்வாய்ப்படும் வரை திகழ்ந்தார். துவக்கம் முதல் பிடல் காஸ்ட்ரோவுக்கு பக்கபலமாக, அவரது இளைய சகோதரர் ராவுல் காஸ்ட்ரோ விளங்கி வந்தார். பிடல் காஸ்ட்ரோ, 2008ல், கியூபா அதிபர் பதவியை, ராவுலிடம் ஒப்படைத்தார். அதன்பின், 2011ல், கம்யூ., கட்சி தலைவர் பொறுப்பையும், ராவுல் ஏற்றுக் கொண்டார்.


2016ல், பிடல் காஸ்ட்ரோ மறைந்தார்.ராவுல் காஸ்ட்ரோ, அமெரிக்க அதிபராக இருந்த ஒபாமா உடன் நட்பு பாராட்டினார். அதனால், கியூபா மீதான பல கட்டுப்பாடுகளை அமெரிக்கா தளர்த்தியது. கியூபாவில் பல்வேறு பொருளாதார சீர்திருத்தங்களை, ராவுல் கொண்டு வந்தார். எனினும், தற்போதுள்ள உணவுப் பஞ்சம், மக்களிடையே அதிகரித்துள்ள பொருளாதார ஏற்றத் தாழ்வு போன்றவை, ஆளும் கட்சி தலைவருக்கு சவாலாக இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

மூலக்கதை