டிவிட்டரில் கோளாறு பொதுமக்கள் பேஜாரு: சர்வர் முடங்கியதால் பாதிப்பு

தினகரன்  தினகரன்
டிவிட்டரில் கோளாறு பொதுமக்கள் பேஜாரு: சர்வர் முடங்கியதால் பாதிப்பு

புதுடெல்லி: சர்வரில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, டிவிட்டர் இணையதளம் நேற்று முடங்கியது. சமூகவலை தளங்களில் ஒன்றான டிவிட்டர், உலகம் முழுவதும் பல கோடி மக்களின் பயன்பாட்டில் உள்ளது. இதில், தங்களின் கருத்துகளை பதிவு செய்வதில் மக்களும், கட்சிகள், தலைவர்கள், அமைப்புகள் ஆர்வத்துடன் உள்ளன. இந்நிலையில், டிவிட்டரின் இணையதள சர்வரில் நேற்று காலையில் திடீரென கோளாறு ஏற்பட்டது. இதனால், உலகளவில் இதை பயன்படுத்தி வரும் பல கோடி பயனாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். தங்களின் டிவிட்களை பதவியேற்றம் செய்ய முடியாமலும், டைம்லைன் தகவல்களை பார்க்கவும் முடியாமலும் தவித்தனர். டிவிட்களை மக்கள் பதிவு செய்தபோது, ‘ஏதோ தவறு நடந்துவிட்டது. மீண்டும் முயற்சிக்கவும்,’ என்ற தகவல் மட்டுமே தொடர்ந்து வெளியாக வெறுப்பேற்றியது. இது குறித்து டுவிட்டர் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தகவல்களை பதிவு செய்வதில் பிரச்னை உள்ளது. இந்த கோளாறை சரி செய்ய முயற்சித்து வருகிறோம். விரைவில் மக்கள் இதை பயன்படுத்தலாம்,’ என கூறப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, பல மணி நேர முயற்சிக்கு பிறகு சர்வர் பிரச்னையை டிவிட்டர் நிர்வாகம் சரி செய்தது. அதன் பிறகு, அதை மக்கள் பயன்படுத்த தொடங்கினர்.

மூலக்கதை