அன்னிய முதலீடு உயர்வு அமெரிக்கா வரவேற்பு
வாஷிங்டன்:இந்திய காப்பீட்டு துறையில் அன்னிய நேரடி முதலீட்டு வரம்பு உயர்த்தப்பட்டு உள்ளதை வரவேற்பதாக, அமெரிக்கா தெரிவித்துள்ளது.
காப்பீட்டு துறையில் அன்னிய நேரடி முதலீட்டு வரம்பை, 49 சதவீதத்தில் இருந்து, 74 சதவீதமாக உயர்த்தும் சட்ட திருத்த மசோதா, நம் பார்லி.,யில் சமீபத்தில் நிறைவேற்றப் பட்டது. இதை, இந்திய - அமெரிக்கர்களுக்கான, அமெரிக்க பார்லி., குழு வரவேற்றுள்ளது. இக்குழுவினர், அமெரிக்காவுக்கான இந்திய துாதர் தரன்ஜித் சிங் சாந்துவுக்கு கடிதம் எழுதியுள்ளனர்;
அதில் கூறப்பட்டுள்ளதாவது:நீண்ட காலமாக எதிர்பார்த்திருந்த சீர்திருத்தம் தற்போது அமலுக்கு வந்திருப்பது வரவேற்கத்தக்கது. இது, இந்திய மக்களுக்கும், வர்த்தகத்திற்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் உதவும். இந்திய காப்பீட்டு துறையில் அமெரிக்க நிறுவனங்கள் அதிக அளவில் முதலீடு மேற்கொள்ள வழி ஏற்பட்டுள்ளது.
இது, இந்தியாவின் அடிப்படை கட்டமைப்பு வசதிக்கான இலக்கை எட்ட துணை புரியும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.