தர்பூசணி வரத்து குறைவால் விலை உயர்வு

தினகரன்  தினகரன்
தர்பூசணி வரத்து குறைவால் விலை உயர்வு

பொள்ளாச்சி: பொள்ளாச்சி மார்க்கெட்டுக்கு தர்பூசணி வரத்து துவங்கியுள்ளது. ஆனால், வரத்து குறைவால் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். பொள்ளாச்சி காந்தி மார்க்கெட்டுக்கு ஒவ்வொரு ஆண்டும் மாம்பழம், தர்பூசணி, பலாப்பழம், அன்னாசி பழம் மற்றும் கரும்பு உள்ளிட்டவை சீசனை பொறுத்து விற்பனைக்காக மொத்தமாக கொண்டு வரப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் துவக்கத்தில் இருந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து தர்பூசணி வரத்து இருக்கும். ஆனால், கடந்தாண்டு தமிழகத்தில் பல மாவட்டங்களில் பெய்த கன மழையால், தர்பூசணி பெரும்பாலும் அழுகி அறுவடை பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது, வெயிலின் தாக்கம் துவங்கியுள்ளதால், தர்பூசணி வரத்து ஆரம்பித்துள்ளது. ஆனால், அந்த தர்பூசணிகள் சிறிய அளவில் இருப்பதால் வியாபாரிகளுக்கு உரிய லாபம் கிடைப்பதில்லை என்று கூறப்படுகிறது. இதனால், தர்பூசணிகளை கடந்த ஆண்டைவிட கூடுதல் விலைக்கு விற்பனை ெசய்ய வேண்டியதாக வியாபாரிகள் தெரிவித்தனர். சிறிய அளவிலான தர்பூசணி இருந்தாலும் உள்ளூர் வியாபாரிகள் மட்டுமின்றி உடுமலை, வால்பாறை உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து வியாபாரிகள் நேரில் வந்து விற்பனைக்காக வாங்கி செல்கின்றனர். கடந்தாண்டில் மொத்த விலைக்கு ஒரு கிலோ தர்பூசணி ரூ.15 முதல் அதிகபட்சமாக ரூ.18வரை விற்பனை செய்யப்பட்டது. இந்தாண்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து வரத்து குறைவால், தற்போதைய நிலவரப்படி மொத்த விலைக்கு ரூ.18க்கும், சில்லரை விலைக்கு ரூ.22க்கும் விற்பனை செய்யப்படுவதாகவும், திருவண்ணாலை, திண்டிவனம் பகுதியிலிருந்து வரத்து ஒரளவு வந்தால் மட்டும், விற்பனை அதிகரித்து லாபம் கிடைக்கும் என மொத்த வியாபாரிகள் தெரிவித்தனர்.

மூலக்கதை