முழுமையாக 'டிராப்' செய்யப்பட்ட 'பாகுபலி' வெப் சீரிஸ்

தினமலர்  தினமலர்
முழுமையாக டிராப் செய்யப்பட்ட பாகுபலி வெப் சீரிஸ்

ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ் மற்றும் பலர் நடித்து வெளிவந்த 'பாகுபலி 1, பாகுபலி 2' ஆகிய படங்கள் வசூல் ரீதியாக பெரிய சாதனை படைத்தன. இந்திய அளவில் படம் மிகவும் பிரபலமானது. ஹிந்தி சினிமா தான் இந்திய சினிமா என்று அடையாளப்பட்டிருந்த நிலையில் அந்த வெற்றி தென்னிந்திய சினிமா பக்கமும் தனி வெளிச்சத்தை செலுத்தியது.

அதனால், பிரபல நெட்பிளிக்ஸ் ஓடிடி நிறுவனம் 'பாகுபலி' படத்தை அப்படியே வெப் சீரிஸ் ஆகத் தயாரிக்க முன் வந்தது. 'பாகுபலி' முதல் பாகத்திற்கு முன்பான கதையா என்ன நடந்தது என்பது பற்றித்தான் 'பாகுபலி - பிபோர் தி பிகினிங்' என்ற அந்த வெப் சீரிஸில் இடம் பெறும் என்றார்கள்.

ரம்யா கிருஷ்ணன் நடித்த கதாபாத்திரமான சிவகாமி கதாபாத்திரம் பற்றிய வரலாறாக அந்தக் கதை எழுதப்பட்டிருந்தது. முதலில் தேவ கட்டா இயக்கத்தில் மிர்ணாள் தாக்கூர் நடிக்க பல அத்தியாயங்களைப் படமாக்கினார்கள். ஆனால், அதன் தரத்தில் திருப்தியில்லை என நெட்பிளிக்ஸ் குழு கூறியுள்ளது. பின்னர் தேவ கட்டாவை மாற்றிவிட்டு, அவருக்குப் பதிலாக 'குணால் தேஷ்முக், ரிபு தாஸ்குப்தா ஆகியோர் மீண்டும் வெப் சீரிஸைப் படமாக்கும் வேலைகளில் இறங்கினார்களாம்.

ஆனால், அவர்களது பணியும் நெட்பிளிக்ஸ் நிறுவனத்திற்கு திருப்தி அளவிக்கவில்லை. எனவே, ஒட்டு மொத்தமாக அந்த வெப் சீரிஸையே வேண்டாமென டிராப் செய்துவிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இத் தொடருக்காக இதுவரை 150 கோடி வரை செலவு செய்துள்ளார்களாம். டிராப் செய்ததன் மூலமாக அதற்கென போட்ட 200 கோடி ரூபாய் மிச்சமாகிவிட்டது என்றும் சொல்கிறார்கள்.

வெள்ளித் திரையில் சாதனை படைத்த ஒரு படத்திற்கு ஓடிடி திரையில் இப்படி ஒரு சோதனையா ?.

மூலக்கதை