ஒட்டுமொத்த கலை உலகிற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு: பிர்ஜூ மகராஜ் மறைவுக்கு பிரதமர் மோடி, கமல் இரங்கல்!!

தினகரன்  தினகரன்
ஒட்டுமொத்த கலை உலகிற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு: பிர்ஜூ மகராஜ் மறைவுக்கு பிரதமர் மோடி, கமல் இரங்கல்!!

டெல்லி : கதக் நடன கலைஞர் பிர்ஜு மகாராஜ்  டெல்லியில் உடல் நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 83. நாட்டின் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூஷன் உள்ளிட்ட பல விருதுகளை பெற்ற இவர் நேற்றிரவு டெல்லியில் தனது வீட்டில் திடீரென மயங்கி விழுந்துள்ளார்.  இதையடுத்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில், இவர் மாரடைப்பால் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.  கதக் நடன கலைஞர் பிர்ஜு மகாராஜூக்கு ஏற்கனவே டயாலிசிஸ் செய்யப்பட்டு வந்துள்ளது. கதக் நடன கலைஞர் பிர்ஜு மகாராஜ்  நடிகர் கமல்ஹாசன் இயக்கி நடித்த  விஸ்வரூபம் படத்தில் உன்னை காணாத நான் இன்று நானில்லையே என்ற பாடலுக்கு நடன வடிவமைப்பு செய்தவர்.இந்நிலையில் பிரதமர் மோடி  தனது ட்விட்டர் பக்கத்தில், \'உலகம் முழுவதும் இந்திய நடனக் கலைக்கு தனித்துவமான அங்கீகாரத்தை பெற்றுத் தந்தவர் பண்டிட் பிர்ஜு மகராஜ் . பண்டிட் பிர்ஜு மகாராஜ் மறைவு ஒட்டுமொத்த கலை உலகிற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு \' என்று பதிவிட்டுள்ளார்.அதேபோல் நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல் ஹாசன், \'ஈடு இணையற்ற நடனக் கலைஞரான பண்டிட் பிர்ஜூ மகராஜ் மறைந்தார்.ஓர் ஏகலைவனைப் போல பல்லாண்டுகள் தொலைவிலிருந்து அவதானித்தும்,விஸ்வரூபம் படத்திற்காக அருகிருந்தும் நான் கற்றுக்கொண்டவை ஏராளம்.இசைக்கும் நாட்டியத்திற்கும் தன் ஆயுளை அர்ப்பணித்துக்கொண்டவரே, ‘உன்னை காணாது நான் இன்று நானில்லையே’\' என்று ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மூலக்கதை