5 மாநிலங்களில் ஜன.22ம் தேதி வரை பேரணிகள், பொதுக்கூட்டங்கள் நடத்த தடை: தேர்தல் ஆணையம் உத்தரவு

தினகரன்  தினகரன்
5 மாநிலங்களில் ஜன.22ம் தேதி வரை பேரணிகள், பொதுக்கூட்டங்கள் நடத்த தடை: தேர்தல் ஆணையம் உத்தரவு

டெல்லி : சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள 5 மாநிலங்களில் ஜன.22ம் தேதி வரை பேரணிகள், பொதுக்கூட்டங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஜனவரி 15 வரை தடை விதிக்கப்பட்ட நிலையில் ஜனவரி 22 வரை தடையை நீட்டித்து தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநிலங்களின் சட்டசபை பதவிக்காலம் முடிவடைகிறது.  இதையொட்டி, இந்த 5 மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தலை நடத்த தலைமை தேர்தல் ஆணையம் தீவிர முயற்சியில் ஈடுபட்டது. ஒமிக்ரான் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என்று அலகாபாத் ஐகோர்ட் அறிவுறுத்தியது. ஆனாலும், திட்டமிட்டபடி தேர்தலை நடத்துவது என தேர்தல் ஆணையம் முடிவுசெய்து தேர்தல் தேதியையும் சமீபத்தில் அறிவித்தது.அதன்படி பிப்ரவரி 10-ம் தேதி முதல் மார்ச் 7-ம் தேதி வரை தேர்தல் நடைபெறுகிறது. உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா ஆகிய மாநிலங்களுக்கு ஒரே கட்டமாக பிப்ரவரி-14-ம் தேதி தேர்தல் நடக்கிறது.மணிப்பூரில் 2 கட்டமாகவும் (பிப்ரவரி 27, மார்ச் 3), உத்தர பிரதேசத்தில் 7 கட்டங்களாகவும் (பிப்ரவரி 10 முதல் மார்ச் 7 வரை) தேர்தல் நடக்கிறது. வாக்குகள் மார்ச் 10-ம் தேதி எண்ணப்படுகிறது.கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக 5 மாநில சட்டசபை தேர்தலில் பொதுக்கூட்டங்கள் மற்றும் ரோடு ஷோவுக்கு தலைமை தேர்தல் ஆணையம் கடந்த 8-ம் தேதி தடைவிதித்து இருந்தது. அந்த தடை இன்றுடன் முடிவடைகிறது. இதனால் அரசியல் கட்சிகள் சமூக வலைதளங்கள் வாயிலாக பிரசாரங்களில் ஈடுபட்டு வந்தன.இந்நிலையில், தலைமை தேர்தல் ஆணையம் இன்று 5 மாநில தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்தியது. ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில் தேர்தல் பொதுக்கூட்டங்களுக்கு ஜனவரி 22ம் தேதி வரை தடை நீட்டிக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மூலக்கதை