ஐ.பி.எல்., நடத்த ‘ரெடி’ * இலங்கை அணி அழைப்பு | ஜனவரி 14, 2022
புதுடில்லி: ஐ.பி.எல்., தொடரின் 15வது சீசனை தங்கள் மண்ணில் நடத்த வருமாறு இலங்கை அணி அழைத்துள்ளது.
இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) சார்பில் ஐ.பி.எல்., ‘டி–20’ தொடர் நடத்தப்படுகிறது. இதன் 13வது சீசன் முழுவதும், 14வது சீசனில் பாதி போட்டிகளும் எமிரேட்சில் நடத்தப்பட்டன. 15வது சீசனில் 10 அணிகள் பங்கேற்க உள்ள நிலையில் இந்தியாவில் கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுத்துள்ளது.
இதனால் 15வது தொடரை இலங்கை அல்லது தென் ஆப்ரிக்காவில் நடத்த இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து இலங்கை கிரிக்கெட் போர்டு செயலர் மோகன் டி சில்வா கூறியது:
இலங்கையில் ஐ.பி.எல்., நடத்த முயற்சிகள் நடப்பதாக கேள்விப்பட்டோம். இது நடந்தால் மகிழ்ச்சி அடைவோம். இதுகுறித்து பி.சி.சி.ஐ., தலைவர் கங்குலியிடம் முதல் கட்ட பேச்சு வார்த்தையை துவங்கியுள்ளோம். கொரோனா பரவலும் இங்கு அதிகம் இல்லை என்பதால் ஐ.பி.எல்., நடத்த மிக ஆர்வமாக காத்திருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.