நாளை வழங்கப்பட்ட விடுமுறை ரத்து: தமிழக முதல்வர் வேண்டுகோளை ஏற்று கேரளாவில் பொங்கலுக்கு இன்று விடுமுறை

தினகரன்  தினகரன்
நாளை வழங்கப்பட்ட விடுமுறை ரத்து: தமிழக முதல்வர் வேண்டுகோளை ஏற்று கேரளாவில் பொங்கலுக்கு இன்று விடுமுறை

திருவனந்தபுரம்: கேரளாவில் தமிழர் அதிகம் வசிக்கும் 6 மாவட்டங்களில் பொங்கல் பண்டிகைக்கு சனிக்கிழமை அரசு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இதுதொடர்பாக தமிழக முதல்வர் ஸ்டாலின் கேரள முதல்வருக்கு கடிதம் அனுப்பியதையடுத்து இன்று விடுமுறை தினமாக அறிவித்து கேரள அரசு உத்தரவிட்டுள்ளது.தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கேரளாவில் கடந்த சில வருடங்களாக தமிழர்கள் அதிகம் வசிக்கும், திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, இடுக்கி, பாலக்காடு, வயநாடு ஆகிய 6 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் இன்று பொங்கல் பண்டிகை உலகம் முழுவதும் தமிழர்களால் கொண்டாடப்படுகிறது. ஆனால், கேரளாவில் நாளை (15ம் தேதி) பொங்கலுக்கு அரசு விடுமுறை அளித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையறிந்த தமிழக  முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று கேரள முதல்வர் பினராய் விஜயனுக்கு  கடிதம் எழுதினார். அதில், தமிழ் பேசும் மக்கள் பெருமளவு  வாழும் கேரளாவின் 6 மாவட்டங்களில், பொங்கல் பண்டிகைக்கு உள்ளூர் விடுமுறை  அறிவிப்பது குறித்த கோரிக்கை தொடர்பாக தங்களது உடனடி கவனத்தை ஈர்க்க  விழைகிறேன்.  கடந்த 12 ஆண்டாக ேகரளாவில் ஜனவரி 14ம் தேதி பொங்கல்  பண்டிகைக்கான உள்ளூர் விடுமுறையாக அறிவித்து வருகிறது என்று அறிகிறேன்.  ஜனவரி 14ம் தேதி புனிதமான தை தமிழ் மாதத்தின் முதல் நாளாகும். ஆனால்  இந்தாண்டில் ஜனவரி 15ம் தேதி 6 மாவட்டங்களில் விடுமுறையாக  அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே தமிழ் சமூகங்கள் இடையே உலகம் முழுவதும்  ெகாண்டாடப்படும் பொங்கல் பண்டிகைக்கான உள்ளூர் விடுமுறை தினமாக ஜனவரி 14ம்  தேதியை அறிவித்திட நடவடிக்கை எடுக்குமாறு நான் அன்புடன் கேட்டு  கொள்கிறேன். இவ்வாறு கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார். இதையடுத்து  கேரளாவில் சனிக்கிழமை விடுமுறை ரத்து செய்யப்பட்டு, இன்று(14ம் தேதி) பொங்கல் விடுமுறை அளிக்கப்படும் என்று அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமை வழக்கம் போல அலுவலகங்கள் செயல்படும்.

மூலக்கதை