இலங்கை வீரர் ‘பல்டி’ * மீண்டும் விளையாட முடிவு | ஜனவரி 13, 2022
கொழும்பு: சமீபத்தில் ஓய்வு அறிவித்த இலங்கை வீரர் ராஜபக்சா, மீண்டும் விளையாட விருப்பம் தெரிவித்துள்ளார். இலங்கை கிரிக்கெட் வீரர் பானுகா ராஜபக்சா 30. கடந்த 2021, ஜூலையில் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம் ஆனார். இதுவரை 5 ஒருநாள், 18 ‘டி–20’ போட்டிகளில் பங்கேற்று மொத்தம் 3 அரைசதம் உட்பட 409 ரன் எடுத்திருந்தார். ‘டி–20’ உலக கோப்பை தொடரில் அதிக ரன் எடுத்த இலங்கை வீரர்களில் மூன்றாவது இடம் பெற்றார். இவர் 8 போட்டியில் 155 ரன் எடுத்திருந்தார். கடந்த வாரம் திடீரென சர்வதேச அரங்கில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அடுத்து மற்றொரு வீரர் குணதிலகாவும் ஓய்வு பெற்றார். இதையடுத்து ஓய்வு பெற விரும்பும் வீரர்கள் மூன்று மாதத்துக்கு முன் விருப்ப ஓய்வு கடிதம் தர வேண்டும் என இலங்கை கிரிக்கெட் போர்டு அறிவித்தது.
இதனிடையே ராஜபக்சா மீண்டும் இலங்கை அணிக்காக விளையாட விருப்பம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இலங்கை கிரிக்கெட் போர்டு வெளியிட்ட அறிக்கையில்,‘விளையாட்டு அமைச்சர், தேர்வுக்குழுவினருடன் நடந்த தொடர்ச்சியான சந்திப்புகளை அடுத்து, தனது ஓய்வு கடிதத்தை திரும்பப் பெற முடிவு செய்துள்ளார் ராஜபக்ச. தொடர்ந்து இலங்கை அணிக்காக விளையாட முடிவு செய்துள்ளார்,’ என தெரிவித்துள்ளது.