மதுரையில் மல்லிகைப்பூ: கிலோ ரூ2500க்கு விற்பனை

தினகரன்  தினகரன்
மதுரையில் மல்லிகைப்பூ: கிலோ ரூ2500க்கு விற்பனை

மதுரை: மதுரை மாவட்டத்தில் தொடர் மழையால் பூக்கள் சாகுபடி பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. விளைநிலங்களில் செடியில் இருந்து பூக்கள் உதிர்ந்து வருகின்றன. தண்ணீர் தேங்கிய நிலங்களில் பூச்செடிகள் அழுகுகின்றன. இதனால், மதுரை மாட்டுத்தாவணியில் உள்ள ஒருங்கிணைந்த மலர் வணிக வளாகத்திற்கு, சுற்றுப்புற கிராமங்களிலிருந்து வரும் பூக்கள் வரத்து குறைந்துள்ளது. அதே நேரம் சபரிமலை சீசன் தற்போது துவங்கியுள்ளதால், பூக்கள் தேவை அதிகரித்துள்ளது. தேவைக்கேற்ப மார்க்கெட்டிற்கு வரத்தில்லை. இதனால், பூக்கள் விலை நேற்று கிடுகிடுவென உயர்ந்துள்ளது. பூ மார்க்கெட்டில் கடந்த வாரம் கிலோ ரூ.1000க்கு விற்பனையான மல்லிகை பூ நேற்று ரூ.2,500க்கு விற்பனையானது. இதேபோல, பிச்சி ரூ.800, முல்லைப்பூ ரூ.900, சம்பங்கி ரூ.200, செவ்வந்தி ரூ.250, அரளி ரூ.400, மரிக்கொழுந்து ரூ.150 என விற்பனையானது.

மூலக்கதை