கென்யாவில் ஆற்று வெள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து!: திருமண நிகழ்ச்சிக்கு சென்ற 31 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு..!!

தினகரன்  தினகரன்
கென்யாவில் ஆற்று வெள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து!: திருமண நிகழ்ச்சிக்கு சென்ற 31 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு..!!

கென்யா: கென்யா நாட்டில் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்ற போது பேருந்து ஆற்று வெள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 31  பேர் உயிரிழந்தனர். கென்யாவில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி தீர்க்கும் நிலையில், ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் மக்கள் பெரிதும் துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். பல இடங்களில் வெள்ளம் தேங்கியுள்ளதால் மக்கள் அனைவரும் வீடுகளுக்குள்ளே முடங்கி கிடக்கின்றனர். இந்நிலையில் தலைநகர் நைரோபியில் இருந்து 200 கிலோ மீட்டர் தொலைவில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தேவாலயம் ஒன்றின் பாடகர் குழுவினர் பேருந்தில் சென்றுள்ளனர். அப்போது கிடுய் கவுண்டியில் உள்ள என்.சி.யு. ஆற்றின் மீது வெள்ளத்தின் நடுவே கடக்க முயன்ற பேருந்து எதிர்பாராத விதமாக தண்ணீருக்குள் கவிழ்ந்தது. இதில் பேருந்தில் இருந்த 4 குழந்தைகள் உள்பட 31 பேர் வெள்ளத்தில் மூழ்கி பலியாகினர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த மீட்பு படையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு 12 பேரை பத்திரமாக மீட்டனர். திருமண நிகழ்விற்கு சென்று உயிரிழந்த சம்பவம் அந்நாட்டில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் பலியானவர்களுக்கு அந்த மாகாண ஆளுநர் நகிலு இரங்கல் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை