இந்தியாவிலும் கொரோனாவுக்கு பூஸ்டர் டோஸ் செலுத்தப்படுமா? : தேசிய நோய் பரவல் தடுப்பு வல்லுநர் குழு இன்று முக்கிய ஆலோசனை

தினகரன்  தினகரன்
இந்தியாவிலும் கொரோனாவுக்கு பூஸ்டர் டோஸ் செலுத்தப்படுமா? : தேசிய நோய் பரவல் தடுப்பு வல்லுநர் குழு இன்று முக்கிய ஆலோசனை

டெல்லி :  அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவைத் தொடர்ந்து இந்தியாவிலும் பூஸ்டர் டோஸ் செலுத்துவது தொடர்பாக வல்லுநர் குழு இன்று கலந்து ஆலோசிக்கிறது. ஓமிக்ரான் கொரோனா வைரஸ் பரவலை அடுத்து உலகின் பல்வேறு நாடுகள் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்த முடிவு எடுத்துள்ளன. இந்தியாவிலும் 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ் செலுத்த பரிசீலிக்க வேண்டும் என சார்ஸ் கொரோனா மரபியல் ஆய்வாளர்கள் ஒன்றிய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். அதே போல தேசிய நோய் தடுப்பு தொழில்நுட்ப ஆலோசனை குழுவும் பூஸ்டர் டோஸ் செலுத்துவது தொடர்பாக ஒன்றிய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. இந்த நிலையில் தேசிய நோய் தடுப்பு தொழில்நுட்ப ஆலோசனைக் குழு இன்று மீண்டும் டெல்லியில் கூடி இது குறித்து ஆலோசனை செய்கிறது. அனைவருக்கும் பூஸ்டர் டோஸ் செலுத்துவதற்கு பதிலாக தேவைப்படுவோருக்கு மட்டும் செலுத்துவது குறித்து இன்றைய கூட்டத்தில் முடிவு எடுக்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. மேலும் 18 வயதிற்கு கீழ் உள்ள சிறுவர்களுக்கு தடுப்பூசி போடுவது குறித்தும் இந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட உள்ளது. 

மூலக்கதை