மயாங்க் அகர்வால் அபார சதம் சரிவிலிருந்து மீண்டது இந்தியா

தினகரன்  தினகரன்
மயாங்க் அகர்வால் அபார சதம் சரிவிலிருந்து மீண்டது இந்தியா

மும்பை: நியூசிலாந்து அணியுடனான 2வது டெஸ்டின் முதல் இன்னிங்சில், தொடக்க வீரர் மயாங்க் அகர்வாலின் அபார சதத்தால் சரிவிலிருந்து மீண்ட இந்தியா முதல் நாள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 221 ரன் குவித்துள்ளது. வாங்கடே மைதானத்தில் நேற்று தொடங்கிய இப்போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் கோஹ்லி முதலில் பேட் செய்ய முடிவு செய்தார். இந்திய அணியில் காயம் காரணமாக ஜடேஜா, ரகானே, இஷாந்த் இடம் பெறவில்லை. கோஹ்லி மீண்டும் தலைமை பொறுப்பேற்ற நிலையில், சிராஜ், ஜெயந்த்துக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது.நியூசிலாந்து அணியிலும் கேப்டன் கேன் வில்லியம்சன் காயத்தால் விலகியதால் அவருக்கு பதிலாக டேரில் மிட்செல் சேர்க்கப்பட்டார். டாம் லாதம் தலைமையில் நியூசி. களமிறங்கியது. மழை காரணமாக மைதானம் ஈரமாக இருந்ததால் ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. உணவு இடைவேளைக்குப் பிறகு மயாங்க், கில் இருவரும் இந்திய இன்னிங்சை தொடங்கினர். சிறப்பாக விளையாடிய இருவரும் முதல் விக்கெட்டுக்கு 80 ரன் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்தனர்.கில் 44 ரன் (71 பந்து, 7 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி அஜாஸ் படேல் சுழலில் ராஸ் டெய்லர் வசம் பிடிபட்டார். அடுத்து வந்த புஜாரா, கோஹ்லி இருவரும் அஜாஸ் பந்துவீச்சில் டக் அவுட்டாகி வெளியேற, இந்தியா 30 ஓவரில் 80 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்து சரிவை சந்தித்தது. இந்த நிலையில், மயாங்க் - ஷ்ரேயாஸ் அய்யர் இணைந்து உறுதியுடன் போராடினர். இந்த ஜோடி 4வது விக்கெட்டுக்கு 80 ரன் சேர்த்தது. நிதானமாக விளையாடிய ஷ்ரேயாஸ் 18 ரன் எடுத்து அஜாஸ் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் பிளண்டெல் வசம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சாஹா பொறுப்புடன் கம்பெனி கொடுக்க, மயாங்க் டெஸ்ட் போட்டிகளில் தனது 4வது சதத்தை பதிவு செய்தார். முதல் நாள் ஆட்ட முடிவில் இந்தியா 4 விக்கெட் இழப்புக்கு 221 ரன் குவித்துள்ளது. மயாங்க் 120 ரன் (246 பந்து, 14 பவுண்டரி, 4 சிக்சர்), சாஹா 25 ரன்னுடன் களத்தில் உள்ளனர். நியூசி. தரப்பில் அஜாஸ் 29 ஓவரில் 10 மெய்டன் உள்பட 73 ரன் விட்டுக்கொடுத்து 4 விக்கெட் கைப்பற்றினார். இன்று 2வது நாள் ஆட்டம் நடைபெறுகிறது.

மூலக்கதை