உலக கோப்பை போட்டி ரத்து | நவம்பர் 27, 2021
ஹராரே: பெண்கள் உலக கோப்பை தொடருக்கான தகுதிச்சுற்று போட்டிகள் பாதியில் ரத்தாகின.
நியூசிலாந்து பெண்களுக்கான உலக கோப்பை கிரிக்கெட் தொடர் 2022, மார்ச்–ஏப்., ல் நடக்கவுள்ளது. இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து இத்தொடருக்கு ஏற்கனவே தகுதி பெற்று விட்டன. இதற்கான தகுதிச்சுற்று போட்டிகள் ஜிம்பாப்வேயின் ஹராரேயில் நடந்தன. இலங்கை, விண்டீஸ், வங்கதேசம், பாகிஸ்தான் உட்பட 9 அணிகள் இரு பிரிவுகளாக பிரிந்து போட்டிகளில் பங்கேற்றன.
ஆனால் புது வரை ‘ஒமிக்ரான்’ கொரோனா பரவல் காரணமாக பல்வேறு போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இதனால் உடனடியாக தகுதிச்சுற்று ரத்து செய்யப்படுவதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) அறிவித்தது. தற்போதுள்ள தரவரிசை அடிப்படையில் பாகிஸ்தான், விண்டீஸ், வங்கதேச அணிகள் உலக கோப்பை தொடரில் பங்கேற்க உள்ளன. இலங்கை, அயர்லாந்து அணிகளுக்கும் வாய்ப்பு வரலாம்.
தாய்லாந்து பரிதாபம்
தாய்லாந்து பெண்கள் அணி இதுவரை ஐ.சி.சி., தரவரிசை பட்டியலில் இடம் பெறவில்லை. தகுதிச்சுற்றில் தாய்லாந்து அணி, வங்கதேசம், ஜிம்பாப்வே, அமெரிக்க அணியை வீழ்த்தி இருந்தது. ஆனால் தொடர் ரத்தானதால் உலக கோப்பை வாய்ப்பு பறிபோய்விட்டது.