பாலகிருஷ்ணா ஒரு அணுகுண்டு - இயக்குனர் ராஜமவுலி

தினமலர்  தினமலர்
பாலகிருஷ்ணா ஒரு அணுகுண்டு  இயக்குனர் ராஜமவுலி

தெலுங்குத் திரையுலகத்தின் அதிரடி ஆக்ஷன் ஹீரோ பாலகிருஷ்ணா. மறைந்த நடிகரும், முதல்வருமான என்.டி.ராமராவின் மகனான பாலகிருஷ்ணாவுக்கென தெலுங்குத் திரையுலகத்தில் தனி ரசிகர் கூட்டம் உண்டு. அவருடைய ஆக்ஷன் காட்சிகளை அங்கு மட்டுமல்லாது மற்ற மொழிகளிலும் ரசிகர்கள் ரசிப்பார்கள்.

பாலகிருஷ்ணா தற்போது நாயகனாக நடித்துள்ள 'அகான்டா' படம் டிசம்பர் 2ம் தேதி வெளியாக உள்ளது. பொயபட்டி சீனு இயக்கத்தில், தமன் இசையமைப்பில், பிரக்யா, ஸ்ரீகாந்த் மற்றும் பலர் நடித்துள்ளார்கள். இப்படத்தின் வெளியீட்டிற்கு முந்தைய நிகழ்ச்சி நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர் ராஜமவுலி, நடிகர் அல்லு அர்ஜுன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் ராஜமவுலி, “பாலகிருஷ்ணா ஒரு அணுகுண்டு. அந்த அணுகுண்டை எப்படி வெடிக்க வைக்க வேண்டும் என்பது இயக்குனர் பொயபட்டி சீனுவுக்கு நன்றாகத் தெரியும். அந்த ரகசியத்தை அவர் மட்டும் வைத்துக் கொள்ளக் கூடாது, மற்றவர்களுக்கும் சொல்ல வேண்டும். அகான்டா புரோமோவில் உள்ளவை ஒரு முன்னோட்டம்தான், ஆனால், படத்தில் இன்னும் அதிகமான அற்புதமான காட்சிகள் இருக்கும். உங்களைப் போலவே நானும் 'அகான்டா'வின் அறிமுகக் காட்சியைப் பார்க்க ஆவலாக இருக்கிறேன். முதல் நாள் முதல் காட்சியை தியேட்டரில் கண்டிப்பாகப் பார்ப்பேன்,” என்றார்.

நடிகர் அல்லு அர்ஜுன் பேசுகையில், “சிரஞ்சீவி சார், பாலகிருஷ்ணா சார் ஆகியோரைப் பார்த்துத்தான் நான் வளர்ந்தேன். சினிமா மீதான பாலகிருஷ்ணா சாரின் மோகத்தைப் பார்த்தும், அவரது டயலாக் உச்சரிப்பைப் பார்த்தும் வியந்திருக்கிறேன். அவரது டயலாக் டெலிவரியை வேறு எந்த நடிகராலும் ஈடு செய்ய முடியாது,” என்றார்.

இந்தக் கால இளம் ஹீரோக்களின் டிரைலர்களுக்குக் கிடைக்கும் வரவேற்பு போலவே இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளியான 'அகான்டா' டிரைலருக்கு வரவேற்பு கிடைத்துள்ளது. யூடியூபில் 2 கோடி பார்வைகளை இந்த டிரைலர் கடந்துள்ளது.

மூலக்கதை