எலான் மஸ்க் நிறுவனத்துக்கு தடை பொதுமக்களுக்கு அரசு எச்சரிக்கை

தினமலர்  தினமலர்
எலான் மஸ்க் நிறுவனத்துக்கு தடை பொதுமக்களுக்கு அரசு எச்சரிக்கை

புதுடில்லி:இந்தியாவில், செயற்கைக்கோள் அடிப்படையிலான ‘பிராட்பேண்டு’ இணைய சேவைகளை வழங்க, எலான் மஸ்க் தலைமையிலான ‘ஸ்டார்லிங்க்’ நிறுவனத்துக்கு உரிமம் வழங்கப்படவில்லை என, தொலைதொடர்பு துறை தெரிவித்துள்ளது.
மேலும், இந்நிறுவனத்தால் விளம்பரப்படுத்தப்படும் சேவைகளை பெறுவதற்கு, பொதுமக்கள் முன்பதிவு செய்ய வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டிருக்கிறது.உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலான் மஸ்க் தலைமையில் நடைபெற்று வரும் ஸ்டார்லிங்க் நிறுவனம், அதிவேகமான பிராட்பேண்டு சேவையை, செயற்கைக்கோள் வாயிலாக வழங்கி வருகிறது.
இந்தியாவிலும் இத்தகைய சேவையை வழங்க இருப்பதாக கூறி, அதற்காக முன்பதிவு செய்துகொள்ளுமாறு விளம்பரம் செய்து வருகிறது.இதையடுத்து, இந்த சேவையை பெறுவதற்காக 5 ஆயிரம் பேருக்கும் மேல் முன்பதிவு செய்துள்ளனர்.இந்நிலையில், இத்தகைய பிராட்பேண்டு சேவையை இந்தியாவில் வழங்க, ஸ்டார்லிங்க் நிறுவனத்துக்கு உரிமம் வழங்கப்படவில்லை என, தொலைதொடர்பு துறை தெரிவித்துள்ளது.
அத்துடன், ஒழுங்குமுறை விதிகளின் படி இயங்குமாறு, ஸ்டார்லிங்க் நிறுவனத்தை, இத்துறை கேட்டுக் கொண்டுள்ளது. கூடவே முன்பதிவுகளை உடனடியாக நிறுத்துமாறும், உரிய அனுமதிகளை பெற்ற பின், சேவைகளை வழங்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்டார்லிங்க் நிறுவனம், இந்தியாவில் அடுத்த ஆண்டு டிசம்பரிலிருந்து, செயற்கைக்கோள் வாயிலாக, பிராட்பேண்டு சேவையை வழங்க திட்டமிட்டுள்ளது. ஆனால் இதுவரை இதற்கான உரிமம் எதையும் இந்நிறுவனம் பெறவில்லை.

மூலக்கதை