எத்தனை முறை கூறினாலும் திருந்தவில்லை நாட்டை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்: போலீசார் குறித்து உயர் நீதிமன்றம் வேதனை

தினகரன்  தினகரன்
எத்தனை முறை கூறினாலும் திருந்தவில்லை நாட்டை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்: போலீசார் குறித்து உயர் நீதிமன்றம் வேதனை

திருவனந்தபுரம்: ‘எத்தனை முறை கூறினாலும் போலீசார் திருந்துவதில்லை, இந்த நாட்டை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்,’ என்று கேரள உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. கேரள  மாநிலம், கொல்லம் அருகே தென்மலை உருகுன்னு பகுதியை சேர்ந்தவர் ராஜூ. இவர் கேரள உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் அவர், ‘தென்மலை போலீஸ் நிலையத்தில் நான் ஒரு புகார் கொடுக்க சென்றேன். ஆனால், என்னுடைய புகார் குறித்து விசாரிக்காமல் இன்ஸ்பெக்டர் விஸ்வம்பரன், சப்-இன்ஸ்பெக்டர் சாலு ஆகியோர் சேர்ந்து என் கையில் விலங்கு போட்டு குற்றவாளி போல் தாக்கினார்கள். எனவே, இருவர் மீதும் நடவடிக்கை  எடுக்க உத்தரவிட வேண்டும்,’ என்று கோரினார்.  இந்த வழக்கு நேற்று முன்தினம் நீதிபதி தேவன் ராமச்சந்திரன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது போலீசாரின் நடவடிக்கைக்கு நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும், ‘‘சமீப காலமாக கேரள போலீசுக்கு எதிராக ஏராளமான குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வருகிறது. இது தொடர்பாக பலமுறை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த போதும் காவல் துறை கண்டுகொள்ளவில்லை. சட்டத்திற்கு உட்பட்ட அறிவுரைகளையும், உத்தரவுகளையும் தான் போலீசார் அமல்படுத்த வேண்டும். சொந்த முடிவுகளை பொதுமக்கள் மேல்  திணிக்கும் அதிகாரம் போலீசுக்கு இல்லை. இதற்கு முன்பே போலீசின் மோசமான நடவடிக்கைகள் மீது கடும் நடவடிக்கைகள் எடுத்திருந்தால், தற்போது கேள்விப்படும் சம்பவங்களை தவிர்த்திருக்கலாம். நாம் 21ம் நூற்றாண்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை போலீசார் மறக்கக் கூடாது. இனியும் போலீஸ் திருந்தாவிட்டால், நம் நாட்டை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்,’’ என்றார். உயர் நீதிமன்றத்தின் இந்த கருத்து, கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மூலக்கதை