இந்திய கால்பந்து அணியில் அசத்தும் சங்ககிரி மாரியம்மாள்

தினகரன்  தினகரன்
இந்திய கால்பந்து அணியில் அசத்தும் சங்ககிரி மாரியம்மாள்

சேலம் : அடுத்த ஆண்டு இந்தியாவில் மகளிர் ஆசிய கோப்பை கால்பந்து தொடர் நடந்து வருகிறது. இதற்கு தயாராகும் வகையில், பிரேசில் நாட்டில் நான்கு நாடுகளுக்கு இடையே நடைபெறும் சர்வதேச கால்பந்து போட்டியில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்தப் போட்டிகளில் இந்தியா, பிரேசில், சிலி, வெனிசுலா ஆகிய நாடுகள் பங்கேற்கின்றன. இதற்கான 23 பேர் கொண்ட மகளிர் அணியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்துமதி, கார்த்திகா, மாரியம்மாள், சவுமியா ஆகிய 4 பேர் இடம்பெற்றுள்ளனர்.நேற்று பிரேசில் அணியுடன் நடந்த போட்டியில் இந்திய அணி 1-6 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்தது. வலுவான பிரேசில் அணியுடன் இந்தியா தோல்வி அடைந்தாலும் இந்திய வீராங்கனைகளின் ஆட்டம் சிறப்பாக இருந்தது. இந்த போட்டியில் சேலத்தைச் சேர்ந்த மாரியம்மாள் 83வது நிமிடத்தில் மாற்று வீரராக களம் இறங்கி ஆடி கவனம் ஈர்த்தார். சேலம் மாவட்டம் சங்ககிரியை சேர்ந்த விசைத்தறி தொழிலாளி பாலமுருகன். இவரது மகள் மாரியம்மாள்(17). இவருக்கு இளம் வயதில் கால்பந்தாட்டத்தின் மீது ஏற்பட்ட மோகத்தால் இவரது தந்தை நாமக்கல்லில் உள்ள கால்பந்தாட்ட விளையாட்டு விடுதியில் சேர்த்தார்.நாமக்கல் அரசுப் பெண்கள் மேல்நிலை பள்ளியில் 12ம் வகுப்பு பயின்று வருகிறார். இங்கு பள்ளி படிப்புடன் தீவிர கால்பந்து பயிற்சியிலும் ஈடுபட்டு வந்த மாரியம்மாள் துவக்கத்தில் மாவட்ட அளவிலான போட்டிகளில் சிறப்பாக விளையாடி மாநில அளவிலான அணியில் இடம்பிடித்து தனது திறமையினால் தமிழ்நாடு அணியில் பங்கேற்று தேசிய அளவிலான போட்டிகளில் பல வெற்றிக்கு துணை நின்றார். நேற்று அவர் இந்திய அணிக்காக ஆடியதால் சொந்த ஊர் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

மூலக்கதை