நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்: மிடில் ஆர்டரில் சுப்மான் கில் களம் இறங்குகிறார்

தினகரன்  தினகரன்
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்: மிடில் ஆர்டரில் சுப்மான் கில் களம் இறங்குகிறார்

கான்பூர்: நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 3 போட்டிகள் கொண்ட டி.20 தொடரை இந்தியா முழுமையாக கைப்பற்றிய நிலையில், அடுத்ததாக 2 டெஸ்ட் போட்டிகள் நடக்கிறது. இதில் முதல் டெஸ்ட் கான்பூரில் வரும் 25ம் தேதி தொடங்குகிறது. இதற்காக இரு அணி வீரர்களும் தயாராகி வருகின்றனர். இந்திய கேப்டன் விராட் கோஹ்லிக்கு முதல் டெஸ்ட்டில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. 2வது டெஸ்ட்டில் அவர் அணிக்கு திரும்புகிறார். இதனால் முதல் டெஸ்ட்டில் ரகானே அணியை வழிநடத்த உள்ளார். ரோகித்சர்மா, பும்ரா, ஷமி, ரிஷப் பன்ட், ஷர்துல் தாகூர் ஆகியோருக்கும் டெஸ்ட் தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.இதனால் ஆடும் லெவனில் இடம் பிடிக்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தொடக்க வீரராக கே.எல்.ராகுலுடன் மயங்க் அகர்வால் களம் இறங்குவார் என தெரிகிறது. கோஹ்லி, ரிஷப் பன்ட் இல்லாததால் மிடில் ஆர்டர் பலவீனமாக உள்ளது. இதனால் சுப்மான்கில் அல்லது அறிமுக வீரராக ஸ்ரேயாஸ் அய்யர் ஆடவும் வாய்ப்பு உள்ளது. விராட் கோஹ்லி இடத்தை நிரப்புவதுதான் பெரிய சவாலாக இருக்கும்.கே.எல்.ராகுலை மிடில் ஆர்டரில் ஆட வைத்தாலும் தொடக்கத்தில் அனுபவ வீரர் இல்லாத நிலை ஏற்படும். ஸ்ரேயாஸ் அய்யர், 54 முதல்தர போட்டிகளில் 12 சதம் மற்றும் 23 அரைசதம் உள்பட 81.54 ஸ்ட்ரைக் ரேட், 52.18 சராசரியில் 4,500 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளார். ஆனால் அவர் தோள்பட்டை அறுவை சிகிச்சை காரணமாக கடந்த ஒரு ஆண்டாக சிவப்பு பந்து கிரிக்கெட் ஆடவில்லை. கான்பூர் பிட்ச் சுழலுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் இந்திய அணி அஸ்வின், ஜடேஜா, அக்சர் பட்டேல் என 3 சுழற்பந்துவீச்சாளர்களுடன் களம் இறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கேப்டன் அஜிங்க்யா ரகானே, சேதேஷ்வர் புஜாரா, இஷாந்த் சர்மா, மயங்க் அகர்வால் மற்றும் சில வீரர்கள் கடந்த 7 நாட்களாக மும்பையில் பயிற்சி பெற்றனர். நேற்று அவர்கள் கான்பூர் திரும்பினர். இன்று அங்கு தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.

மூலக்கதை