தாதா சாகேப் பால்கே விருது பெற்ற ரஜினிகாந்த் - தமிழ் மக்களுக்கு சமர்ப்பிப்பதாக அறிவிப்பு

தினமலர்  தினமலர்
தாதா சாகேப் பால்கே விருது பெற்ற ரஜினிகாந்த்  தமிழ் மக்களுக்கு சமர்ப்பிப்பதாக அறிவிப்பு

இந்திய திரைப்படத் துறையில் வாழ்நாள் சாதனை புரிந்த திரைக் கலைஞர்களுக்காக வழங்கப்படும் விருது தாதா சாகேப் பால்கே விருது. இந்திய திரைப்படத் துறையின் தந்தை என அழைக்கப்படும் தாதா சாகேப் நினைவாக இந்த விருது 1969ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.

இந்தியத் திரையுலகில் பெரும் சாதனைகளைப் படைத்த பலருக்கு இதுவரை இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. தென்னிந்தியத் திரையுலகத்திலிருந்து எல்.வி.பிரசாத், நாகிரெட்டி, நாகேசுவரராவ், ராஜ்குமார், அடூர் கோபாலகிருஷ்ணன், டி.ராமாநாயுடு, கே.விஸ்வநாத் உள்ளிட்டோர் இந்த விருதை வாங்கியுள்ளனர்.

சினிமாவில் 45 ஆண்டுகள் சிறப்பாக பங்காற்றியதற்காக ரஜினியை கவுரவித்து இந்த விருது வழங்கப்பட்டது. விழாவில் நடிகர் ரஜினிகாந்த் தனது மனைவி லதா ரஜினிகாந்த், மூத்த மகள் ஐஸ்வர்யா தனுஷ், மாப்பிள்ளை தனுஷ், பேரக்குழந்தைகள் ஆகியோருடன் கலந்து கொண்டார்.

காணொளி வெளியீடு
முன்னதாக ரஜினிக்கு விருது வழங்கும் முன்பாக அவரைப்பற்றிய காணொளி ஒளிபரப்பட்டது. ரஜினி சினிமாவுக்கு என்ட்ரி ஆனது முதல் அவரது பல சாதனைகளை இந்த காணொளியில் வெளியிட்டனர்.

தமிழ் மக்களுக்கு சமர்ப்பணம்
விருது பெற்றதும் ரஜினிகாந்த் பேசுகையில், ‛ விருது வழங்கிய மத்திய அரசுக்கும், என்னை வாழ வைக்கும் தமிழ் மக்களுக்கும் நன்றி. தாதா சாகேப் பால்கே விருதை எனது குருவான இயக்குனர் பாலச்சந்தர், அண்ணன் சத்யநாராயணராவ், நண்பர் ராஜ்பகதூர், என் திரைப்பட தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், சக நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், தியேட்டர் உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள், பத்திரிக்கை ஊடக நண்பர்கள், என்னுடைய ரசிகர்கள் மற்றும் என்னை வாழ வைக்கும் தெய்வங்களான தமிழ் மக்களுக்கு சமர்பிக்கிறேன், எனத் தெரிவித்தார்.

மூலக்கதை