ஆயிரம் சந்தேகங்கள் : ‘கிரிப்டோ கரன்சி’யில் முதலீடு செய்யலாமா?

தினமலர்  தினமலர்
ஆயிரம் சந்தேகங்கள் : ‘கிரிப்டோ கரன்சி’யில் முதலீடு செய்யலாமா?

என் 11 வயது மகனுக்கு, அவன் பெயரில் புதிய சேமிப்பு கணக்கு அஞ்சலகத்தில் அல்லது வங்கிகளில் துவக்கலாமா? இவ்விரண்டில் எது சிறந்தது?
அந்தோணிராஜ், ஆண்டிபட்டி.

வழக்கமான கணக்காக இல்லாமல், உங்கள் மகனுக்கு ‘ஜன் தன் யோஜனா’ திட்டத்தில் கணக்கு ஆரம்பியுங்கள். ‘மினிமம் பேலன்ஸ்’ பராமரிக்க வேண்டாம். 30 ஆயிரம் ரூபாய் வரை ஆயுள் காப்பீடு உண்டு. 2 லட்சம் ரூபாய் வரை விபத்து காப்பீடு உண்டு. முதலீட்டுக்கு வட்டியும் உண்டு. நகரம், கிராமம் என, அனைத்து இடங்களிலும் இந்த ஜன்தன் கணக்கை துவக்க முடியும். வங்கிக் கணக்குக்கு உள்ள அத்தனை வசதிகளும், இத்திட்டத்திலும் உண்டு என்பதால், இதைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

நான், மத்திய அரசு பணியிலிருந்து ஓய்வு பெற்றவன். 35 ஆண்டுகளுக்கு முன் வாங்கிய ஒரு காலியிட மனையை, இப்போது விற்று,அந்த பணத்தை என் மகளுக்கு வீடு கட்ட கொடுக்கலாம் என நினைக்கிறேன். விற்று வரும் முழுத் தொகைக்கும் வருமான வரி கட்ட வேண்டுமா?
பி.பி.ஆறுமுகம், கோவை.

நீங்கள் உங்கள் மகளுக்கு கொடுக்கும் தொகை, ‘பரிசு’ என்றே கருதப்படும். அதனால், அதற்கு எந்த வருமான வரியும் செலுத்த வேண்டாம். ஆனால், மனை விற்று வரும் தொகைக்கு, நீண்ட கால மூலதன ஆதாய வரி செலுத்த வேண்டுமா என்பதை, உங்கள் ஆடிட்டரிடம் கலந்தாலோசித்து முடிவு செய்யுங்கள்.

கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால், பணம் கோடிக்கணக்கில் பெருகும் என்று சொல்கின்றனரே, உண்மையா?

ஜே.பி.போஸ், ஆலாஞ்சி.

இது ஏதோ வழக்கமான வைப்பு நிதி மாதிரி நினைத்து இருந்தீர்கள் என்றால், அதை மறந்து விடுங்கள். கிரிப்டோ கரன்சி சந்தை, விலை ஏற்றத்துக்கான காரணங்கள், எந்த கரன்சியில் முதலீடு செய்வது என்ற அறிவு ஆகியவை ஓரளவுக்காவது மிக மிக அவசியம். ஓராண்டேனும் இதைப் பற்றி முழுமையாக வாசித்துவிட்டு, நன்கு புரிந்து, அதன் பின்னர் களத்தில் இறங்குங்கள். கிரிப்டோ ஜோதியில் கருகிப் போன விட்டில் பூச்சிகள் ஏராளம்.

‘ஸ்ரீ இன்பிராஸ்ட்ரக்சர் எக்விப்மென்ட் பைனான்ஸ்’ என்.சி.டி.,யில் முதலீடு செய்து உள்ளேன். இது முதிர்வு அடைந்து 10 மாதம் ஆகிறது. இதுவரை முதலீட்டு தொகையும்; வட்டியும் கிடைக்கவில்லை. எப்போது கிடைக்கும் என்பதை எப்படி அறிந்து கொள்வது?

ராதா, சென்னை.
இந்த நிறுவனத்தில் இருந்து பணம் பெற வேண்டியவர்கள், கடந்த வெள்ளிக்கிழமைக்குள் தங்களது ‘க்ளெய்ம்’களை சமர்ப்பிக்கச் சொல்லி, ஏற்கனவே விளம்பரம் வந்ததே கவனிக்கவில்லையா? இந்த நிறுவனத்தின் சொத்துக்களை விற்பனை செய்ய நியமிக்கப்பட்டுள்ள ரஜ்னீஷ் சர்மாவை, [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளுங்கள்.

‘லக்ஷ்மி விலாஸ் வங்கி’யின் பங்குகள் வைத்துள்ள பங்குதாரர்களுக்கு, பங்கு ஒன்றின் மதிப்பு எவ்வளவு என்று கூற இயலுமா?

ரமணி, மேலுார், மதுரை.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம், லக்ஷ்மி விலாஸ் வங்கியை டி.பி.எஸ்., வங்கி கையகப் படுத்திய போது, ஆர்.பி.ஐ., இதன் பங்குகளின் மதிப்பு ‘பூஜ்ஜியம்’ என்று அறிவித்து விட்டது. தேசிய மற்றும் மும்பை பங்குச் சந்தைகளில், தற்போது இவை வர்த்தகத்திலும் இல்லை.

பணப் பரிவர்த்தனை, பணச் சுழற்சி திட்டங்களில் மிகச்சிறந்த குறுகிய கால சேமிப்பு அல்லது முதலீடு எவை? மேலும், குழந்தைகளின் கல்வி, திருமணம், மருத்துவச் செலவுகள், வேலை இழப்பின் போது குடும்பத் தேவைகளை நிர்வகிக்க மிகச்சிறந்த சேமிப்பு அல்லது முதலீடு என்னென்ன என்பதை அறிய விரும்புகிறேன்.

புருஷோத்தமன், மதுரை.

முதல் கேள்விக்கு என்னிடம் பதில் கிடையாது. அது வழக்கமான முதலீட்டு முறை இல்லை என்பதால், இத்தகைய பணப் பரிவர்த்தனை, பணச் சுழற்சி திட்டங்களைக் கடுமையாக விமர்சிப்பவன் நான். இரண்டாவது கேள்வியில், நிறைய இலக்குகளை வரிசைப்படுத்தி உள்ளீர்கள். கல்வி, திருமணம் போன்ற ஒவ்வொரு இலக்கும் எத்தனை ஆண்டுகளில் நிறைவேற வேண்டியவை என, கணித்துக் கொள்ளுங்கள். அதற்கேற்ப வங்கியில் ஆர்.டி., ஆகவோ அல்லது மியூச்சுவல் பண்டுகளிலோ முதலீடு செய்யுங்கள். அவை நிச்சயம் கைகொடுக்கும்.

பாகப் பிரிவினை பத்திரம் பதிவு செய்ய, செலுத்த வேண்டிய முத்திரைத்தாள் கட்டணம், பதிவுக் கட்டணம் சம்பந்தமான வழிமுறைகள் பற்றி விளக்கவும்.

எஸ்.ராமமூர்த்தி, விருதுநகர்.

குடும்ப உறவுகளுக்குள் பாகப் பிரிவினை என்றால், சொத்தின் மதிப்பில் 1 சதவீதம் முத்திரைத் தாள் கட்டணமும்; 1 சதவீதம் பதிவுக் கட்டணமும் செலுத்த வேண்டும். குடும்ப உறுப்பினர்கள் அல்லாதவர்களுக்கு பாகப் பிரிவினை என்றால், சொத்தின் மதிப்பில் 4 சதவீதம் முத்திரைத்தாள் கட்டணமும்; 1 சதவீதம் பதிவுக் கட்டணமும் செலுத்த வேண்டும்.

‘ஜன்தன்’ வங்கிக் கணக்கை இப்போதும் துவக்கலாமா? என்ன தகுதி வேண்டும்?
ருக்குமணி செல்வராஜ், சிறுமுகை.

தாராளமாக. எல்லா வங்கிகளும் இந்த வங்கிக் கணக்கை வைத்து உள்ளன. 10 வயதுக்கு மேற்பட்ட இந்திய குடிமகனாக இருந்தால் போதும். ஆதார், ரேஷன் அட்டை, பான் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை போன்ற அரசு வழங்கிய ஏதேனும் ஒரு ஆவணத்தை ஆதாரமாக காண்பித்தால் போதும். ‘ஜீரோ பேலன்ஸ்’ கணக்கு துவக்கிவிடலாம்.

பரம்பரை சொத்து ஒன்று விற்கப்பட்டு, எனக்கு கணிசமான தொகை வருகிறது. அதைக் கொண்டு, வீட்டுக் கடனை அடைக்கலாமா? மியூச்சுவல் பண்டு அல்லது பங்குச் சந்தையில் முதலீடு செய்யலாமா?

நந்தகுமார், சென்னை.

வருமான வரியில் கழிவு கோருவதற்காக வீட்டுக்கடன் ஒரு காலத்தில் பயன்பட்டது. ஆனால், தற்போது புதிய திட்டத்தின்படி வருமான வரி செலுத்தலாம் என்பதால், வீட்டுக் கடனால் பெரிய லாபம் இல்லை. வீட்டுக்கு தற்போது மறுவிற்பனை மதிப்பு இல்லை. ஈட்டும் வாடகையோ வெகு சொற்பம். இந்நிலையில், வீட்டுக் கடனை அடைத்துவிடுவதே நிம்மதியைத் தரும்.

வாச­கர்­களே, நிதி சம்­பந்­தப்­பட்ட உங்­கள் கேள்­வி­களை, ‘இ--–மெயில்’ மற்­றும் ‘வாட்ஸ் ஆப்’ வாயி­லாக அனுப்­ப­லாம்.

ஆயி­ரம் சந்­தே­கங்­கள்

தின­ம­லர், 39, ஒயிட்ஸ் சாலை, சென்னை – 600 014என்ற நம் அலு­வ­லக முக­வ­ரிக்கு அஞ்­சல் வாயி­லா­க­வும் அனுப்­ப­லாம். கேள்­வி­க­ளைச் சுருக்­க­மாக தமி­ழில் கேட்­க­வும்.
ஆர்.வெங்­க­டேஷ்,
[email protected] ph: 98410 53881

மூலக்கதை