‘பொருளாதார மீட்சியை கண்டு வருகிறது நாடு’

தினமலர்  தினமலர்
‘பொருளாதார மீட்சியை கண்டு வருகிறது நாடு’

புதுடில்லி:பணவீக்கம் மற்றும் அதிகரித்து வரும் கச்சா எண்ணெய் விலை போன்றவை, மிகவும் தற்காலிகமான விஷயங்கள் தான் என்றும், நாட்டின் பொருளாதாரம் மீட்சியை கண்டு வருவதாகவும், அரசின் மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், தனியார் மற்றும் பொதுத்துறை முதலீடுகள் அதிகரித்து வருவதாகவும், மிகவும் பாதிப்புக்கு உள்ளான சுற்றுலா மற்றும் பயண துறை, மீண்டும் மீட்சி காணத் துவங்கி இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.பொது விவகாரங்களுக்கான மன்றமான பி.ஏ.எப்.ஐ., நிகழ்ச்சி ஒன்றில், காணொலி வாயிலாக பங்கேற்ற மூத்த அதிகாரிகள் கூறியதாவது:

அசாதாரண இலக்குதம்மு ரவி, செயலர், பொருளாதார உறவுகளுக்கான வெளியுறவு துறை: இப்போதைய நிலையில், நாட்டின் பணவீக்கம் கவலை தரக்கூடிய ஒன்றாக இருந்தாலும்; இது நீண்டகாலம் நீடிக்காது என்றே நான் கருதுகிறேன்.அதிகரித்து வரும் கச்சா எண்ணெய் விலை, உலகளவில் பல பொருட்களின் விலை ஏற்றத்துக்கு காரணமாக அமைந்துள்ளது.

இது குறித்து உலகின் பல நாடுகள் கவலை கொண்டிருந்தாலும், இந்த பணவீக்கமானது தற்காலிகமானது. நம் நாட்டிலும் கச்சா எண்ணெய் விலை உயர்வால், உணவு மற்றும் இதர பொருட்களின் விலை அதிகரித்து வருகிறது.உள்நாட்டு சந்தை முக்கியமானது என்றாலும், நாமும் உலகளவில் போட்டி போட வேண்டும்.

கிட்டத்தட்ட கடந்த 10 ஆண்டுகளாக, நம் ஏற்றுமதி கிட்டத்தட்ட 22.50 லட்சம் கோடி ரூபாய் என்ற நிலையில் தேக்கமடைந்து இருக்கிறது.இந்நிலையில், பிரதமரின் இலக்கு 30 லட்சம் கோடி ரூபாய் என்பது அசாதாரணமானதாகும்.நடப்பு நிதியாண்டில் இந்த இலக்கை எட்ட, அனைத்து வெளிநாட்டு முயற்சிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன.

குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் பொருளாதாரத்தில் நிலையானதாகவும், வலுவானதாகவும் இருக்க வேண்டும். அதற்கு நாம் செய்ய வேண்டியது நிறைய இருக்கிறது. உருவாக்கப்படும் கொள்கைகள் இத்துறை குறித்து கவனம் செலுத்தக்கூடியதாக இருக்க வேண்டும். பெரிய நிறுவனங்கள், தங்களுக்கான வழியை அவை கண்டுகொள்ளும். ஆனால் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் நிலை அப்படி இல்லை.

பல தடைகளை அவை சந்திக்கின்றன.பயணங்கள் அதிகரிக்கும்அரவிந்த் சிங், செயலர், சுற்றுலா துறை: கொரோனா முதல் அலையின் காரணமாக, சுற்றுலா துறையில் லட்சக்கணக்கான வேலை இழப்புகளும், வருவாய் வீழ்ச்சியும் ஏற்பட்டது. வெளிநாட்டு பயணியர் வருவது குறைந்ததுடன், உள்நாட்டு பயணங்களும் பாதிக்கப்பட்டன.

இரண்டாவது அலை இன்னும் மோசமாக பாதித்தது. ஜூலை மாதத்துக்குப் பின் உள்நாட்டு பிரிவில் மீட்சியை பார்க்கிறோம்.விரைவில் வெளிநாட்டு பயணங்களும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம்.மாற்றம் வரப்போகிறதுராஜேஷ் அகர்வால், செயலர், திறன் மேம்பாட்டு துறை:பொது மற்றும் தனியார் துறை முதலீடுகள் அதிக வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி வருகின்றன.

இன்னும் அடுத்த மூன்றிலிருந்து நான்கு மாதங்களுக்குள்ளாக, இத்துறையில் நிறைய மாற்றங்கள் மற்றும் ஒழுங்குமுறை நடவடிக்கைகளை காணப் போகிறீர்கள். இது, 16 முதல் 21 வயது வரையிலானவர்களிடம் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும்.இவ்வாறு உயரதிகாரிகள் தெரிவித்தனர்.

மூலக்கதை