உபி சட்டப்பேரவை தேர்தலில் பெண்களுக்கு 40 சதவீதம் சீட்: பிரியங்கா காந்தி அதிரடி அறிவிப்பு

தினகரன்  தினகரன்
உபி சட்டப்பேரவை தேர்தலில் பெண்களுக்கு 40 சதவீதம் சீட்: பிரியங்கா காந்தி அதிரடி அறிவிப்பு

லக்னோ: ‘உத்தர பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட, காங்கிரசில் பெண்களுக்கு 40 சதவீதம் வாய்ப்பு அளிக்கப்படும்,’ என்று பிரியங்கா காந்தி அறிவித்துள்ளார். உத்தர பிரதேசத்தில் அடுத்தாண்டு தொடக்கத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடக்கிறது. காங்கிரசும் இம்மாநிலத்தில் இழந்த தனது செல்வாக்கை மீட்டு, ஆட்சியை பிடிப்பதற்காக பிரியங்கா காந்தியை களமிறக்கி இருக்கிறது. இந்நிலையில், நேற்று அவர் உத்தர பிரதேசத்தில் பயணம் மேற்கொண்டார். அப்போது, லக்னோவில் அவர் அளித்த பேட்டி வருமாறு: அரசியலில் பெண்கள் முழு அதிகாரம் பெற்றவர்களாக இருக்க வேண்டும் என்று காங்கிரஸ் விரும்புகிறது.இம்மாநிலத்தில் நிலவும் வெறுப்புணர்வு அரசியலை பெண் அரசியல்வாதிகளால் மட்டுமே முடிவுக்கு கொண்டு வர முடியும். எனவே, வரும் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட பெண்களுக்கு 40 சதவீதம் வாய்ப்பு அளிக்கப்படும். இதை 50 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்பது எனது தனிப்பட்ட கருத்து.  உத்தர பிரதேச சட்டப்பேரவை தேர்தலின் முதல் வாக்குறுதியாக இதை அறிவிக்கிறேன். தகுதி அடிப்படையில் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். கடந்த 2017 தேர்தலில் உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் 7 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.

மூலக்கதை