கடந்த 5 ஆண்டு காலத்தில் 27 கோடி சொத்து குவிப்பு: மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு

தமிழ் முரசு  தமிழ் முரசு
கடந்த 5 ஆண்டு காலத்தில் 27 கோடி சொத்து குவிப்பு: மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு

சென்னை: முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தான் அமைச்சராக இருந்த 5 ஆண்டுகளில், ரூ. 27 கோடி சொத்து குவித்ததாக தொடரப்பட்ட வழக்கைத் தொடர்ந்து, அவரது சென்னை வீடு உள்பட 44 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் இன்று காலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இந்தச் சோதனையில் பல கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.

கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சர்கள் முறைகேடாக சம்பாதித்து சொத்துகளை குவித்து வருவதாக அப்போதைய எதிர்கட்சியான திமுக குற்றம்சாட்டியது.

தேர்தலின் போது திமுக தனது தேர்தல் அறிக்கையில், முறைகேடாக சம்பாதித்த அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தது. பல்வேறு சமூக அமைப்புகளும் இது குறித்து நீதிமன்றத்திலும் வழக்குத் தொடர்ந்தன.

பாமகவும், அதிமுக ஆட்சியில் நடந்த ஊழல் குறித்து கவர்னரிடம் புகார் அளித்தன.

இந்தநிலையில், தற்போது திமுக ஆட்சி பொறுப்பேற்ற நிலையில், ஊழல் புகார்களில் சிக்கிய அமைச்சர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை தீவிர சோதனை நடத்தி வருகிறது. அதன்படி, முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த எம். ஆர். விஜயபாஸ்கர், உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த எஸ். பி. வேலுமணி, வணிக வரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சராக இருந்த கே. சி. வீரமணி ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடத்தியதில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்தது தொடர்பாக முக்கிய ஆவணங்கள் சிக்கியது.

மேலும் ரொக்க பணமும் பறிமுதல் செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் அவர்கள் மீது வழக்குப் பதிவும் செய்யப்பட்டது.

இந்நிலையில், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் வீட்டில் இன்று அதிகாலை முதல் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதி அதிமுக எம்எல்ஏவான சி. விஜயபாஸ்கர். இவர், கடந்த அதிமுக ஆட்சியில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தார்.

வேலூரைச் சேர்ந்த டாக்டர் விஜய், சுகாதாரத்துறை அமைச்சர் பதவியை இழந்த பிறகு, 2013ம் ஆண்டு நவம்பர் 1ம் தேதி முதல் சுகாதாரத்துறை அமைச்சராக பதவி ஏற்றார். பின்னர் 2016ம் ஆண்டு மீண்டும் நடந்த தேர்தலில் விராலிமலை தொகுதியில் வெற்றி பெற்று மீண்டும் சுகாதாரத்துறை அமைச்சராக பதவி ஏற்றார்.

இந்நிலையில், இவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்து இருப்பதாக வந்த புகாரின் அடிப்படையில், புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அடுத்த இலுப்பூரில் உள்ள விஜயபாஸ்கரின் சொந்த வீட்டில் இன்று காலை 6 மணி முதல் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

டிஎஸ்பி இமயவரம்பன் தலைமையில் 10 மாவட்டங்களை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இன்று காலை புதுக்கோட்டைக்கு வந்தனர்.
 பின்னர் தனித்தனி குழுவாக பிரிந்து காலை 6. 30 மணிக்கு ஒரே நேரத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 30 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

அதன்படி இலுப்பூர் சவுராஷ்டிரா தெருவில் உள்ள விஜயபாஸ்கர் வீடு, இலுப்பூரில் உள்ள விஜயபாஸ்கரின் நண்பர் சுப்பையா, குபேந்திரன், பாண்டியன் வீடுகள், விஜயபாஸ்கரின் சகோதரர் உதயகுமாருக்கு சொந்தமாக இலுப்பூர் அடுத்த மேட்டுச்சேரியில் உள்ள மதர்தெரசா கல்லூரி, இலுப்பூர் நாயுடு தெருவில் உள்ள உதயகுமாரின் உதவியாளர் பாண்டி என்பவரின் வீடு, இலுப்பூரில் அமைச்சருக்கு சொந்தமான ராசி விடுதி, திருவேங்கைவாசலில் உள்ள ராசி மெட்டல்ஸ் கல் குவாரியிலும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர். இதேபோல் கைக்குறிச்சியில் கல்வி நிறுவனம் நடத்தி வரும் ஆலங்குடி துரை தனசேகரன் வீடு, புதுக்கோட்டையில் உள்ள விஜயபாஸ்கரின் உதவியாளரான அன்பானந்தம் வீடு, புதுக்கோட்டை சார்லஸ் நகரில் முருகேசன் வீடுகளில் சோதனை நடந்தது.

திருச்சி எடமலைப்பட்டிபுதூர் எஸ்ஐஎஸ் அபார்ட்மெண்ட் 8வது மாடியில் உள்ள அமைச்சர் விஜயபாஸ்கரின் சகோதரர் உதயகுமாரின் வீட்டிலும் போலீசார் சோதனை நடத்தினர்.

அதேபோல் திருச்சி கிராப்பட்டி காந்தி நகரில் உள்ள இலுப்பூர் பேரூராட்சி முன்னாள் தலைவரும், விஜயபாஸ்கரின் உதவியாளரும், பினாமியுமான ராஜமன்னார் (எ) குருபாபு வீட்டிலும் சோதனை நடந்து வருகிறது. இதேபோல் இலுப்பூரில் உள்ள விஜயபாஸ்கரின் உறவினர்கள், நண்பர்கள் வீடுகளிலும் சோதனை நடந்து வருகிறது.

சென்னையில் அவரது வீடு உள்பட 7 இடங்கள் மற்றும் 6 மாவட்டங்களில் மொத்தம் 44 இடங்களில் விஜயபாஸ்கருக்கு நெருக்கமான உறவினர்கள், நண்பர்கள், உதவியாளர்கள் உள்பட பலரது வீடுகள் மற்றும் அலுவலகங்களில் ஒரே நேரத்தில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடந்து வருகிறது.

சென்னை கீழ்பாக்கத்தில் விஜயசாந்த டவரில் விஜயபாஸ்கர் வசிக்கும் வீட்டில் சோதனை நடந்தது. வீட்டில் அவர் குடும்பத்துடன் வசித்து வந்தார்.

நுங்கம்பாக்கம் வள்ளுவர்கோட்டத்தில் அவரது தந்தை சின்னத்தம்பி வீடு, சென்னை நந்தனத்தில் வசிக்கும் நண்பர் சரவணன் வீடு, வளசரவாக்கத்தில் சீனிவாசன் என்பவரது வீடு, மந்தைவெளிபாக்கத்தில் உள்ள ஓம் வரி ஸ்டோன்ஸ் அலுவலகம், பெசன்ட் நகரில் உள்ள அன்யா என்டர் பிரைசஸ், தி. நநகர் பகீரதி அம்மன் தெருவில் உள்ள விஜயபாஸ்கரின் வீடு என 7 இடங்களில் சோதனை நடந்தது.

காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத், பாலாஜி நகர் பகுதியில் உள்ள அஜய்குமார் (45) என்பவர் ஒரு வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இவர், கடந்த அதிமுக ஆட்சியில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் அலுவலகத்தில் அரசு சார்பில் உதவியாளராக வேலை பார்த்து வந்தார்.

கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் அஜய்குமார் விருப்ப ஓய்வுபெற்றார்.

 தற்போது வாலாஜாபாத் பகுதியில் ஒரு தனியார் பள்ளி மற்றும் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. தற்போது நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் அஜய்குமார், தேவேரியம்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இன்று காலை 7 மணி முதல் பாலாஜி நகரில் உள்ள அஜய்குமாரின் வீட்டில் காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்பு துறை டி. எஸ். பி கலைசெல்வன் தலைமையில் 8 பேர் குழு அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

அதேபோன்று, முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கரின் தங்கை தனலட்சுமி, அவரது கணவர் பாலமுருகன் ஆகிய இருவரும் பல் மருத்துவர்கள். இவர்கள் இருவரும் செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் அருகே புதுப்பட்டினம், கிழக்கு கடற்கரை சாலை அருகே தனியார் பல் மருத்துவமனை நடத்தி வருகின்றனர்.

இவர்கள், புதுப்பட்டினத்தில் உள்ள அரேபியன் கார்டனில் அவர்களுக்கு சொந்தமான வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.
அவர்கள் வீட்டில் இன்று காலை 7 மணி முதல் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து தகவலறிந்ததும் சம்பவ இடத்துக்கு அதிமுக மாவட்ட செயலாளர் ஆறுமுகம் மற்றும் கட்சியினர் விரைந்து வந்து, லஞ்ச ஒழிப்பு போலீசாரின் சோதனையை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இச்சோதனையில், அவரது தங்கை வீட்டில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.

அதில், கூவத்தூர் கோல்டன் பே ரிசார்ட்டில் எம்எல்ஏக்கள் தங்கவைக்கப்பட்டது, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் மைத்துனர் பாலமுருகன் ஏற்பாட்டில்தான் என்பதற்கான தகவல்களும் வெளிவருகின்றன. இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

நேற்று விஜயபாஸ்கர் அதிமுக பொன் விழா ஆண்டு விழாவிற்காக சென்னை வந்திருந்தார். இந்நிலையில் தான் இன்று அதிகாலை இந்த சோதனை அதிரடியாக நடத்தப்பட்டுள்ளது.

இதனால் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டுக்கு உள்ளாகும் 4வது முன்னாள் அமைச்சராகி உள்ளார் விஜயபாஸ்கர். வருமானத்திற்கு அதிகமாக ரூ. 27 கோடி சொத்து குவித்ததாக தற்போது வழக்கு பதியப்பட்டு உள்ளது.

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின் போது தாக்கல் செய்யப்பட்ட விஜயபாஸ்கர், மனைவி ரம்யா, மகள்கள் பெயரிலான அசையும், அசையா சொத்து விவரங்கள் அடங்கிய பிரமாண பத்திரத்தில் குறிப்பிடப்பட்ட விவரங்கள் அடிப்படையிலும் சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தான் தற்போது மீண்டும் தமிழ்நாடு அரசின் லஞ்ச ஒழிப்புத்துறை இங்கு சோதனை நடத்தி வருகிறது. இந்த சோதனையின் முடிவில் பல முக்கிய தகவல்கள், முறைகேடுகள் வெளியே வரலாம் என்றும் கூறப்படுகிறது.

மாமனார் வீட்டில் நகை மதிப்பீடு

கோவை ராமநாதபுரம் நஞ்சுண்டாபுரம் சாலையில் உள்ள எஸ்என்வி கார்டனில் அதிமுக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கரின் மாமனார் சுந்தரம் வீடு உள்ளது.

இங்கும் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு ஏராளமான தங்க நகைகள் சிக்கியதாக தெரிகிறது.

நகைகளை அளவிட நகை மதிப்பீட்டாளர் ஒருவர் வரவழைக்கப்பட்டுள்ளார். அவருடன் வருவாய் துறை அதிகாரிகள் இரண்டு பேர் உடன் சென்றுள்ளனர்.

அவர்கள் முன்னிலையில் நகைகள் மதிப்பீடு செய்யப்பட்டு வருகின்றன.

மேலும், கோவை பீளமேடு தனியார் கல்லூரி எதிரே உள்ள ஒரு கட்டிடத்தின் 4வது மாடியில் முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கருக்கு சொந்தமான அலுவலகம் மற்றும் கோவை சிரியன் சர்ச் ரோட்டில் உள்ள அவரது மாமனாரின் பழைய வீட்டிலும்கூட சோதனை நடைபெறுகிறது.

.

மூலக்கதை