லக்கிம்பூர் படுகொலை நாடு முழுவதும் இன்று ரயில் மறியல் போராட்டம்: விவசாய சங்கம் அறிவிப்பு

தினகரன்  தினகரன்
லக்கிம்பூர் படுகொலை நாடு முழுவதும் இன்று ரயில் மறியல் போராட்டம்: விவசாய சங்கம் அறிவிப்பு

புதுடெல்லி: லக்கிம்பூர் சம்பவத்தில் தொடர்புடைய ஒன்றிய அமைச்சரை பதவியில் இருந்து நீக்கி கைது செய்ய வலியுறுத்தி இன்று நாடு முழுவதும் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று சம்யுக்த் கிசான் மோர்ச்சா அறிவித்துள்ளது. இது குறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: உத்தர பிரதேச மாநிலம், லக்கிம்பூரில் விவசாயிகள் மீது காரை ஏற்றிக்கொன்ற சம்பவத்தில் ஒன்றிய அமைச்சர் மகன் ஆசிஷ் மிஸ்ரா கைது செய்யப்பட்டுள்ளார். இதில் நியாயமான விசாரணை நடைபெற ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ரா தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். அவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நாடு முழுவதும் விவசாய அமைப்பு சார்பில் ரயில் மறியல் போராட்டம் இன்று நடத்தப்படும். இதன்படி மாலை 4 மணி வரை ரயில்களை நிறுத்தும் போராட்டத்தில் விவசாய அமைப்பினர் ஈடுபடுவார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை