பயிற்சியாளராக டிராவிட் நியமனம் பற்றி உண்மையில் எனக்கு எதுவும் தெரியாது: கேப்டன் விராட் கோஹ்லி பேட்டி
துபாய்: 7வது ஐசிசி டி.20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது. இந்த தொடருடன் டி.20 கேப்டன் பதவியில் இருந்து விலக உள்ளதாக விராட் கோஹ்லி அறிவித்துள்ளார். இதனால் அவர் கோப்பையுடன் விடைபெறுவாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அவர் அளித்துள்ள பேட்டி: புவனேஸ்வர்குமார் பார்ம் பற்றி கவலை இல்லை. ஸ்டிரைக் ரேட்டில் அவர் இன்னும் முதலிடத்தில் உள்ளார். ஐபிஎல்லில் பெங்களூருக்கு எதிரான ஆட்டத்தில் கடைசி ஓவரில் 12 ரன் எடுக்க வேண்டிய நேரத்தில் டிவில்லியர்ஸ் களத்தில் இருந்தபோது நேர்த்தியாக பந்துவீசி தனது அணிக்கு வெற்றியை தேடித்தந்தார். களத்தில் அவரின் அனுபவம் உதவும். அவரது துல்லியம் எப்போதும் அணிக்கு விலைமதிப்பற்றது என்று நினைக்கிறேன். அஷ்வின் 4 வருடங்களுக்கு மேலாக வெள்ளை பந்து கிரிக்கெட் விளையாடவில்லை. தற்போது அணியில் இடம்பெற்றுள்ளார். உண்மையில் அவர் மேம்படுத்தி உள்ளார். கடந்த 2 வருடங்களில் நீங்கள் ஐபிஎல்லை பார்த்தால், அவர் கடினமான ஓவர்களை வீசினார். அதிரடி பேட்ஸ்மேன்களுக்கு எதிராக சிறப்பாக பந்துவீசினார். அஷ்வின் தனது ஒயிட்-பால் திறன்களை முழுவதுமாக புதுப்பித்ததற்காக அவருக்கு வெகுமதி அளிக்கப்பட்டுள்ளது . பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமனம் பற்றி உண்மையில் எனக்கு எதுவும் தெரியாது. இதுதொடர்பாக விரிவான கலந்துரையாடல் எதுவும் நடத்தவில்லை. தற்போது உலகக் கோப்பையை வெல்வது தான் மற்ற அணிகளைப் போலவே எங்கள் இலக்காகும். டோனி மிகவும் அனுபவம் வாய்ந்த வீரர். அவர் ஆலோசகராக இருப்பது அணிக்கு கூடுதல் நம்பிக்கையை தரும், என்றார்.