14 மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
14 மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று கன்னியாகுமரி, தென்காசி, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, கரூர், நாமக்கல், திருச்சி, புதுக்கோட்டை, கடலூர், சேலம், ஈரோடு, பெரம்பலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய வட மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழையும், தென்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

 

நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் ஒட்டி பதிவாகக்கூடும்.

அதேபோல் நாளை வடக்கு உள் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். வருகிற 19ம் தேதி தென்மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.



அதேபோல் வருகிற 20ம் தேதி தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை. அரியலூர், பெரம்பலூர், திருச்சி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.

மேலும் குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் இன்று பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கி. மீ வேகத்திலும் அவ்வப்போது 60 கி. மீ வேகத்திலும் வீசக்கூடும். அதேபோல் தென் கிழக்கு அரபிக்கடல், கேரளா கடலோரப் பகுதி, லட்சத்தீவு, மாலத்தீவு பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கி. மீ வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இன்று இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம்.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

.

மூலக்கதை