முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பையடுத்து அனைத்து வழிபாட்டு தலங்களும் திறப்பு: ஞாயிற்றுக்கிழமைகளில் கடற்கரைக்கு செல்லலாம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பையடுத்து அனைத்து வழிபாட்டு தலங்களும் திறப்பு: ஞாயிற்றுக்கிழமைகளில் கடற்கரைக்கு செல்லலாம்

சென்னை: தமிழகத்தில் அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும், வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் பொதுமக்கள் வழிபாட்டிற்கு அனுமதி அளிக்கப்படுகிறது என முதல்வர் மு. க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதையடுத்து  விஜயதசமியை முன்னிட்டு இன்று அனைத்து வழிபாட்டு தலங்களும் திறக்கப்பட்டன.

ஏராளமானோர் ஆர்வமுடன் வழிபாடு செய்தனர். இதுகுறித்து முதல்வர் மு. க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழ்நாட்டில், கொரோனா நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் வரும் 31ம் தேதி காலை 6 மணி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகிறது.

எதிர்வரும் பண்டிகைக் காலங்களில், கொரோனா நோய்த் தொற்று பரவலைத் தொடர்ந்து கண்காணித்து கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், அண்டை மாநிலங்களில் நோய்த் தொற்று நிலையினைக் கருத்தில் கொண்டும். தலைமைச் செயலகத்தில் முதல்வர் தலைமையில் 13ம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

அதன் அடிப்படையில் பொதுமக்கள் அனைவரும் எதிர்வரும் பண்டிகைக் காலங்களில், கூட்டம் கூடுவதை தவிர்க்குமாறும் பொது இடங்களில் கட்டாயம் முகக் கவசம் அணிவதோடு, சமூக இடைவெளியினை கண்டிப்பாக கடைபிடிக்குமாறும் மாவட்ட நிர்வாகம், சென்னை மாநகராட்சி, மருத்துவத் துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் நடத்தப்படும் தடுப்பூசி முகாம்களுக்கு சென்று பொதுமக்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ளுமாறும் கேட்டுக்கொள்கிறேன்.

பண்டிகைக் காலங்களில் பொதுமக்கள் அத்தியாவசியத் தேவைகளுக்காக கடைகளுக்கு செல்வதைக் கருத்தில் கொண்டு. இன்று முதல் ஏற்கனவே செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ள அனைத்து கடைகள், உணவகங்கள் மற்றும் அடுமனைகள் இரவு 11 மணி வரை இயங்க அனுமதிக்கப்படுகிறது.

மேலும், அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும், வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய அனைத்து நாட்களிலும் பொதுமக்கள் வழிபாட்டிற்கு அனுமதி அளிக்கப்படுகிறது. அதே போன்று, அனைத்து தனிப்பயிற்சி நிலையங்கள், அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் ஆகியவையும் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

மேலும் வரும் 1ம் தேதி முதல் மாவட்ட நிர்வாகத்தால் நடத்தப்படும் மாதாந்திர மக்கள் தொடர்பு முகாம்கள் நடத்தலாம். தனியார் நிறுவனங்கள் நடத்தும் பொருட்காட்சிகள் உரிய கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி செயல்படலாம் மழலையர் விளையாட்டு பள்ளிகள், நர்சரி பள்ளிகள், அங்கன்வாடி பள்ளிகள் முழுமையாக செயல்படலாம்.

காப்பாளர், சமையலர் உட்பட அனைத்து பணியாளர்களும் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். ஞாயிற்றுக்கிழமைகளில் கடற்கரைக்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.

திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்வுகளில் 100 நபர்கள் பங்குபெற அனுமதிக்கப்படுகிறது. இறப்பு சார்ந்த நிகழ்வுகளில் 50 நபர்கள் கலந்து கொள்ளலாம்.

ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகள் உரிய கட்டுப்பாடுகளுடன் தொடர்த்து அனுமதிக்கப்படும். திருவிழாக்கள், அரசியல் கூட்டங்கள், சமுதாய மற்றும் கலாச்சார நிகழ்வுகளுக்கு நடைமுறையில் உள்ள தடை தொடரும்.

கடைகளிலும், பொது மக்கள் கூடக்கூடிய இடங்களிலும் எதிர்வரும் பண்டிகைக் காலத்தைக் கருத்தில் கொண்டு, கடைகளின் நுழைவு வாயிலில் வாடிக்கையாளர் பயன்படுத்தும் வகையில் கை கத்திகரிப்பான்கள் கட்டாயமாக வைக்கப்படுவதோடு, உடல் வெப்ப நிலை பரிசோதனை கருவி கொண்டு பரிசோதனை செய்ய வேண்டும்.

கடைகளில் பணிபுரிபவர்களும் வாடிக்கையாளர்களும் கட்டாயம் முகக்கவசம் அணிவதை சம்மந்தப்பட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும். அனைத்து கடைகளும் குளிர் சாதன வசதி இல்லாமல் செயல்படுவதோடு, கடைகளில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில் ஒரே நேரத்தில் அதிகப்படியான நபர்களை அனுமதிக்கக்கூடாது.

கடைகளின் நுழைவு வாயிலில் பொது மக்கள் வரிசையில் காத்திருக்கும் போது ஒரு நபருக்கும் மற்றொருவருக்கும் இடையே போதுமான இடைவெளி இருக்கும் வகையில் குறியீடுகள் போடப்பட வேண்டும்.

நோய்த் நொற்றுக்கு உள்ளானவர்களை கண்டறிதல், நோய்த் தொற்றுக்குள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிதல், சிகிச்சை அளித்தல், தடுப்பூசி செலுத்துதல் மற்றும் கொரோனா நோய் நடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுதல் ஆகிய கோட்பாடுகள் கண்டிப்பாக நடைமுறைப்படுத்தப்படும். கொரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலைத் தடுப்பதற்கு நோய்த் தொற்று பாதிப்பிற்குள்ளானவர்கள் உள்ள பகுதிகளில், நோய்க் கட்டுப்பாட்டு மண்டல எல்லைகளை வரையறை செய்து, நிலையான வழிகாட்டு நடைமுறைகளின்படி, தீவிரமாக நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர் மற்றும் உள்ளளாட்சி அமைப்புகள் மேற்கொள்ள வேண்டும்.

வரையறுக்கப்பட்ட நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட வேண்டும். இந்த நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில், மருத்துவ அவசர சேவைகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் வழங்குதல் தவிர, இதர செயல்பாடுகளுக்க அனுமதி இல்லை.

நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில், குழுக்கள் அமைத்து நோய்த் தொற்று பரவலை தடுக்க தீவிரமாக வீடு வீடாக கண்காணிக்கப்படும்.

கொரோனா நோய்த் தொற்று கட்டுப்பாடு நடைமுறைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு விதிமீறல்களில் ஈடுபடுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் அதிகப்படியான பொதுமக்கள் கூடுவதை தடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம், சென்னை மாநகராட்சி, உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் காவல்துறை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு முதல்வர் மு. க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. முதல்வரின் அறிவிப்பையடுத்துவிஜயதசமியை முன்னிட்டு இன்று அனைத்து வழிபாட்டு தலங்களும் திறக்கப்பட்டன.

ஏராளமானோர் ஆர்வமுடன் வழிபாடு செய்தனர்.

.

மூலக்கதை