சீனாவில் ‘லிங்க்ட்இன்’ சேவையை நிறுத்த ‘மைக்ரோசாப்ட்’ முடிவு

தினமலர்  தினமலர்
சீனாவில் ‘லிங்க்ட்இன்’ சேவையை நிறுத்த ‘மைக்ரோசாப்ட்’ முடிவு

புதுடில்லி:வேலை வாய்ப்புகள் சார்ந்த சமூக ஊடகமான ‘லிங்க்ட்இன்’ சேவையை, சீனாவில் நிறுத்தப் போவதாக, அதை நடத்தி வரும் ‘மைக்ரோசாப்ட்’ நிறுவனம் அறிவித்துள்ளது.
‘தொழில்நுட்ப நிறுவனங்கள் மீதான கட்டுப்பாட்டை சீனா கடுமையாக்குவதால், இந்த முடிவுக்கு வந்திருப்பதாக மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது.சீனாவில் கடந்த 2014ம் ஆண்டில் மைக்ரோசாப்ட் நிறுவனம் லிங்க்ட்இன் சேவையை துவக்கியது. இந்நிலையில், அரசு அண்மைக் காலமாக பல்வேறு கட்டுப்பாடுகளை கொண்டுவருவதை அடுத்து, லிங்க்ட்இன் தன்னுடைய சேவையை நிறுத்திக் கொள்ளும் முடிவுக்கு வந்துள்ளது.
இது குறித்து, தொழில்நுட்ப பகுப்பாய்வு நிபுணர் ஒருவர் கூறியதாவது:சீன அரசு அதன் மீதான விமர்சனங்களை இலகுவாக எடுத்துக்கொள்ளாமல், மிகவும் சீரியஸாக எடுத்துக்கொண்டு விடுகிறது. அதனால், இத்தகைய தகவல் பரிமாற்றங்களை நிறுத்த கடுமையான முயற்சிகளில் இறங்கி விடுகிறது.

இந்நிலையில், லிங்க்ட்இன் போன்ற தகவல் பரிமாற்ற தயாரிப்புகளை சீனாவில் வெளியிடுவது என்பது சிரமமானதாக உள்ளது.இந்த தகவல் யுகத்தில் நீங்கள் எவ்வளவுக்கு எவ்வளவு தகவல்களை கட்டுப்படுத்த முனைகிறீர்களோ, அவ்வளவுக்கு மக்கள் அதை அடைய ஆக்கப்பூர்வமாக முயற்சிப்பார்கள் என்பதை சீன அரசு உணர வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

‘பேஸ்புக்’ மற்றும் ‘டுவிட்டர்’ ஆகியவை சீனாவில் தடை செய்யப்பட்டு, பத்து ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. ‘கூகுள்’ நிறுவனம் 2010ல் சீனாவை விட்டு வெளியேறிவிட்டது. இப்போது லிங்க்ட்இன்.

மூலக்கதை