திருவேற்காடு, சமயபுரம், இருக்கன்குடி ஆகிய 3 கோயில்களில் பயன்பாடு இல்லாமல் இருக்கும் தங்க நகைகளை கட்டிகளாக மாற்றும் திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

தமிழ் முரசு  தமிழ் முரசு
திருவேற்காடு, சமயபுரம், இருக்கன்குடி ஆகிய 3 கோயில்களில் பயன்பாடு இல்லாமல் இருக்கும் தங்க நகைகளை கட்டிகளாக மாற்றும் திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை: திருவேற்காடு கருமாரியம்மன் கோயில், இருக்கன்குடி மாரியம்மன் கோயில், சமயபுரம் மாரியம்மன் கோயில் ஆகிய 3 கோயில்களில் பயன்பாடு இல்லாமல் இருக்கும் தங்க நகைகளை கட்டிகளாக மாற்றும் திட்டத்தை முதல்வர் மு. க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களுக்கு வரும் பக்தர்கள் தங்களது பிரார்த்தனை நிறைவேறியதற்கு நேர்த்திக்கடனாக அளிக்கும் தங்கநகைகளை உருக்கி தங்கக்  கட்டிகளாக மாற்றும் பணி நடைமுறையில் உள்ளது.



கடந்த காலங்களில் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில், மதுரை மீனாட்சியம்மன் கோயில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில், சமயபுரம் மாரியம்மன் கோயில் உட்பட 9 கோயில்களில் பக்தர்களால் காணிக்கையாக வழங்கப்பட்ட தங்க நகைகளை மும்பையில் உள்ள ஒன்றிய அரசுக்கு சொந்தமான தங்க உருக்காலையில் உருக்கப்பட்டு 24 காரட் தங்கக் கட்டிகளாக மாற்றப்பட்டு தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் 497 கிலோ 795 கிராம் தங்கம், முதலீடு செய்யப்பட்டு வட்டி கோயில்களில் வரவு வைக்கப்பட்டுள்ளது.

அதன்பின்னர், கடந்த 10 ஆண்டு காலமாக கோயிலுக்கு வரும் காணிக்கை நகைகள் பெருமளவில் சேர்ந்துள்ளன.

இதில், உபயோகப்படுத்த இயலாத நிலையில், உதிரியாக உள்ள நகைகள் ஒன்றாக சேர்த்து வைக்கப்பட்டுள்ளன. இவற்றால் எவ்வித பயன்பாடும் இல்லாத நிலையில் பாதுகாப்பு கருதி இவற்றை உருக்கி தங்கக் கட்டிகளாக மாற்றுவது அவசியமானது.

இப்பணி பல ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள ஒரு செயல்பாடு ஆகும். இந்த நிலையில், சட்டப்பேரவை கூட்டத்தொடரில், கடந்த 10 ஆண்டுகளாக கோயில்களில் காணிக்கையாக வரப்பெற்ற நகைகளில் கோயிலுக்குத் தேவைப்படும் இனங்கள் நீங்கலாக,

ஏனைய இனங்களை மும்பையில் உள்ள ஒன்றிய அரசுக்குச் சொந்தமான தங்க உருக்காலையில் உருக்கி, சொக்கத் தங்கமாக மாற்றி, திருக்கோயிலுக்கு வருவாய் ஈட்டும் வகையில் வங்கிகளில் முதலீடு செய்து, அதிலிருந்து வரும் வட்டி மூலமாக கோயில்களுக்கு திருப்பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும், இப்பணிகளை கண்காணிப்பதற்கு மூன்று மண்டலங்கள் ஏற்படுத்தப்பட்டு, ஓய்வு பெற்ற நீதிபதிகள் தலைமையிலான குழுக்கள் மூலம் இப்பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

 

அதன்படி, இப்பணிகளைக் மேற்கொள்ள சென்னை, மதுரை மற்றும் திருச்சி மண்டலங்களுக்கு ஓய்வு பெற்ற நீதிபதி திரு. ராஜீ, ஆர். மாலா மற்றும் ரவிசந்திரபாபு ஆகியோர் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டது. இக்குழு சார்பில் நகைகளை கணக்கிடும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

இப்பணிகள் முழுவதுமாக வீடியோ பதிவு செய்யப்படுகிறது. இதன்மூலம் கோயிலின் நிதியை பெருக்குவதுடன், பக்தர்கள் வழங்கிய காணிக்கைகளுக்கு சிறந்த பாதுகாப்பாகவும் அமையும்.



இந்த முதலீட்டின் மூலம் பெறப்படும் வட்டித் தொகை அந்தந்த கோயில் திருப்பணிகள் மற்றும் இதர வளர்ச்சி பணிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. மேலும், அந்தந்த கோயில்களில் சுவாமிகளுக்கான கவசங்கள் மற்றும் ஆபரணங்கள் செய்வதற்கான தேவை எழுந்தால் வங்கிகளில் முதலீடாக வைக்கப்பட்டுள்ள தங்கக் கட்டிகள் திரும்பப் பெறப்பட்டு பயன்படுத்தப்படுகிறது.

தற்போது, கோயில்களின் தேவை போக உள்ள நகைகளை உருக்கி  தங்கக் கட்டிகளாக மாற்றி அவற்றை பாதுகாப்பாக வங்கிகளில் முதலீடு செய்யும் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன.

முதற்கட்டமாக திருவேற்காடு கருமாரியம்மன் கோயில், சமயபுரம் மாரியம்மன் கோயில், இருக்கன்குடி மாரியம்மன் கோயில் ஆகிய 3 கோயில்களில் உள்ள பயன்பாடற்ற தங்க நகைகளை 24 காரட் தங்கக் கட்டிகளாக மாற்றுவதற்கான பூர்வாங்க பணிகளை காணொலிக் காட்சி வாயிலாக தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், அறநிலையத் துறை அமைச்சர் பி. கே.

சேகர்பாபு, முதன்மை செயலாளர் சந்தர மோகன், ஆணையர் குமரகுருபரன் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

.

மூலக்கதை