நல்ல தொடக்கம் கிடைத்தும் தவற விட்டு விட்டோம்: மும்பை கேப்டன் ரோகித்சர்மா பேட்டி

தினகரன்  தினகரன்
நல்ல தொடக்கம் கிடைத்தும் தவற விட்டு விட்டோம்: மும்பை கேப்டன் ரோகித்சர்மா பேட்டி

அபுதாபி: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அபுதாபியில் நேற்று நடந்த 34வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இண்டியன்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த மும்பை 20 ஓவரில், 6 விக்கெட் இழப்பிற்கு 155 ரன் எடுத்தது. அதிகபட்சமாக டிகாக் 55 ரன் (42பந்து) அடித்தார். கேப்டன் ரோகித்சர்மா 33, சூர்யகுமார் 5, இஷான் கிஷன் 14, பொல்லார்ட் 21, குர்னல் பாண்டியா 12 ரன்னில் ஆட்டம் இழந்தனர். பவர்பிளேவில் விக்கெட் இழப்பின்றி 56 ரன் எடுத்த மும்பை ஒரு கட்டத்தில் 170 ரன்னை தாண்டும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கொல்கத்தா வீரர்கள் சிறப்பான பந்துவீச்சால் கட்டுப்படுத்தினர். அந்த அணியின் லுகிபெர்குசன், பிரசித் கிருஷ்ணா தலா 2, சுனில் நரேன் 1 விக்கெட் வீழ்த்தினர். பின்னர் 156 ரன் இலக்கை துரத்திய கொல்கத்தா அணியில் சுப்மான்கில் 19 ரன்னில் ஆட்டம் இழக்க வெங்கடேஷ்-ராகுல் திரிபாதி அதிரடியில் மிரட்டினர். 30 பந்தில், 4 பவுண்டரி, 3 சிக்சருடன் 53 ரன் எடுத்து வெங்கடேஷ் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த கேப்டன் மோர்கன் 7 ரன்னில் வெளியேற மறுமுனையில் திரிபாதி அரைசதம் அடித்தார். 15.1 ஓவரில் 3 விக்கெட் மட்டுமே இழந்து 159 ரன் எடுத்த கொல்கத்தா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ராகுல் திரிபாதி 74 (42 பந்து, 8 பவுண்டரி, 3 சிக்சர்), நிதிஷ் ரானா 5 ரன்னில் களத்தில் இருந்தனர். மும்பை பந்துவீச்சில் பும்ரா 3 விக்கெட் வீழ்த்தினார்.இந்த வெற்றி மூலம் நடப்பு தொடரில் முதல் லீக் போட்டியில் அடைந்த தோல்விக்கு கொல்கத்தா பழிதீர்த்துக்கொண்டது. 4 ஓவரில் 20 ரன் மட்டுமே கொடுத்து ஒரு விக்கெட் எடுத்த சுனில் நரேன் ஆட்டநாயகன் விருது பெற்றார். 9வது போட்டியில் 4வது வெற்றியை பெற்ற கொல்கத்தா 8 புள்ளிகளுடன் 4வது இடத்திற்கு முன்னேறியது. மும்பை 9வது போட்டியில் 5வது தோல்வியை சந்தித்தது. வெற்றிக்கு பின் கேகேஆர் கேப்டன் மோர்கன் கூறியதாவது: நாங்கள் இப்படி விளையாடி நீண்ட நாட்களாகிவிட்டது. இதுபோல் ஆடுவதை தான் எங்கள் பாஸ் (பயிற்சியாளர் மெக்கல்லம்) விரும்புகிறார். வலுவான மும்பையை 155 ரன்னுக்குள் கட்டுப்படுத்தி இலக்கை துரத்தியது எங்களுக்கு நம்பிக்கை தருகிறது. பல திறமையான வீரர்கள் இருப்பதால் எங்கள் ஆடும் லெவனில், வெங்கடேசை சேர்ப்பது கடினமாக இருந்தது. அவர் ரன்கள் எடுத்த விதம் அருமையாக இருந்தது. சுனில் மற்றும் வருண் அபாரமான பந்து வீச்சாளர்கள். கடந்த காலங்களில் கே.கே.ஆர் சாம்பியன்ஷிப்பை வென்றதில் சுனில் முக்கிய பங்கு வகித்துள்ளார், என்றார். மும்பை கேப்டன் ரோகித்சர்மா கூறுகையில், நாங்கள் நன்றாக தொடங்கினோம், ஆனால் மிடில் ஓவர்களில் போதிய ரன் கிடைக்கவில்லை. இது பேட்டிங் செய்ய நல்ல ஆடுகளம். எங்களுக்கு கிடைத்த தொடக்கத்தை பயன்படுத்திக் கொள்ள தவறிவிட்டோம், சிறப்பாக பந்து வீசவில்லை புள்ளி பட்டியல் பற்றி கவலையில்லை. நாங்கள் இன்னும் நடுவில் இருக்கிறோம். நம்பிக்கையுடன் ஆடி சில வெற்றிகளை பெறுவோம், என்றார்.ரோகித் விக்கெட் எப்போதும் நல்லதுஆட்டநாயகன் சுனில் நரேன் கூறுகையில், எந்த வகை கிரிக்கெட்டிலும் ரோகித்தை வெளியேற்றுவது நல்லது. மும்பைக்கு அவர் ஒரு முக்கிய வீரர். வருண் விளையாட்டை பற்றி தெரிந்து கொள்ள விரும்புகிறார் மற்றும் நிறைய கேள்விகள் கேட்கிறார். அவர் விரைவாக கிரிக்கெட்டைப் பற்றி தெரிந்து கொள்ள விரும்பும் ஒருவர், இன்னும் செல்ல வேண்டிய தூரம் உள்ளது. எனது பேட்டிங் அணிக்கு என்ன தேவை என்பதைப் பொறுத்தது. அவர்கள் மேலே அல்லது முடிவில் பேட்டிங் செல்ல விரும்பினால், நான் அதை செய்வேன், என்றார்.

மூலக்கதை