புதிய உச்சம் : சென்செக்ஸ் 60 ஆயிரம் புள்ளிகளை கடந்தது

தினமலர்  தினமலர்
புதிய உச்சம் : சென்செக்ஸ் 60 ஆயிரம் புள்ளிகளை கடந்தது

மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து புதிய உச்சம் தொட்டு வருகின்றன. முதன்முறையாக மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் 60 ஆயிரம் புள்ளிகளை கடந்துள்ளது. அதேப்போன்று தேசிய பங்குச்சந்தையின் நிப்டியும் 17,900 புள்ளிகளை கடந்துள்ளது.

கொரோனா பரவல் அதிகமிருந்த நிலையிலும், இந்திய பங்குச் சந்தைகள் பாதிக்கப்படாமல், உச்சம் தொட்டபடி இருந்தன. சென்செக்ஸ் 50 ஆயிரம், 55 ஆயிரம், 58 ஆயிரம் என தொடர்ந்து உயர்வை கண்டு வந்தது. அந்த வகையில், நேற்றைய வர்த்தகத்தின் இடையே, 59 ஆயிரத்து 957 புள்ளிகளை எட்டியது சென்செக்ஸ். பின், வர்த்தகத்தின் இறுதியில் 59 ஆயிரத்து, 885 புள்ளிகளுடன் புதிய உச்சத்தில் நிலை பெற்றது. தேசிய பங்குச் சந்தையின் ‘நிப்டி’யும், 17 ஆயிரத்து 823 புள்ளிகளில் நிலைபெற்றது.

இன்றைய வர்த்தகத்தில் நிச்சயம் சென்செக்ஸ் 60 ஆயிரம் புள்ளிகளை எட்டும் என முதலீட்டாளர்கள் காத்திருந்தனர். அதன்படியே இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் சென்செக்ஸ் 325.71 புள்ளிகள் உயர்ந்து 60,211.07ஆகவும், நிப்டி 93.30 புள்ளிகள் உயர்ந்து 17,916.30 எனும் புதிய உச்சத்தை தொட்டது. இந்தியாவில் அடுத்தடுத்து பண்டிகை காலம் என்பதால் இப்போதே பல வர்த்தகங்கள் சூடு பிடிக்க தொடங்கி உள்ளன. அந்தவகையில் பங்குச் சந்தைகளை பொறுத்தவரை தீபாவளி கொண்டாட்டம் இப்போதே துவங்கி விட்டது எனலாம்.

மூலக்கதை