டேவிஸ் கோப்பை டென்னிஸ்: இரட்டையர் ஆட்டத்திலும் இந்தியா ஏமாற்றம்

தினகரன்  தினகரன்
டேவிஸ் கோப்பை டென்னிஸ்: இரட்டையர் ஆட்டத்திலும் இந்தியா ஏமாற்றம்

எஸ்பூ: பின்லாந்து அணியுடனான டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியின் இரட்டையர் ஆட்டத்திலும் போராடி தோற்ற இந்தியா, 0-3 என்ற கணக்கில் தொடரை இழந்தது. ஒற்றையர் ஆட்டங்களில் பிரஜ்னேஷ் குணேஸ்வரன், ராம்குமார் ராமநாதன் தோல்வியைத் தழுவிய நிலையில், இரட்டையர் ஆட்டத்தில் ராம்குமார் - திவிஜ் ஷரண் இணை களமிறங்குவதாக இருந்தது. இந்நிலையில், கடைசி நேர மாற்றமாக திவிஜ் ஷரணுக்கு பதிலாக அனுபவ வீரர் ரோகன் போபண்ணாவுடன் ராம்குமார் இணைந்து விளையாடினார்.கேப்டன் ரோகித் ராஜ்பாலின் இந்த வியூகமும் பலனளிக்கவில்லை. வெற்றி கட்டாயம் என்ற நெருக்கடியுடன் களமிறங்கிய போபண்ணா - ராம்குமார் ஜோடி 6-7 (2-7), 6-7 (2-7) என நேர் செட்களில் பின்லாந்தின் ஹென்றி கோன்டினன் - ஹாரி ஹெலியோவாரா ஜோடியிடம் போராடி தோற்றது. 2 செட்டிலும் டை பிரேக்கர் வரை இழுபறியாக நீடித்த இப்போட்டியில் (1 மணி, 38 நிமிடம்) போபண்ணா ஜோடி பல நல்ல வாய்ப்புகளை வீணடித்தது தோல்விக்கு காரணமாக அமைந்தது. பின்லாந்து 3-0 என அசைக்க முடியாத முன்னிலை பெற்று தொடரையும் கைப்பற்றியது.

மூலக்கதை