தமிழில் சிறந்த மொழிபெயர்ப்பு கே.செல்லப்பனுக்கு சாகித்ய அகாடமி விருது

தினகரன்  தினகரன்
தமிழில் சிறந்த மொழிபெயர்ப்பு கே.செல்லப்பனுக்கு சாகித்ய அகாடமி விருது

புதுடெல்லி: சிறந்த இலக்கிய படைப்பாளிகளை கவுரவிக்கும் வகையில் ஆண்டுதோறும் சாகித்ய அகாடமி விருது வழங்கப்படுகிறது. 24 இந்திய மொழிகளில் சிறுகதை, நாவல் போன்ற பலவகையான படைப்புகளுக்கு இது வழங்கப்படுகிறது. இந்நிலையில், மொழிபெயர்ப்பு பிரிவில் சிறந்த படைப்புகளுக்கான சாகித்ய அகாடமி விருது நேற்று அறிவிக்கப்பட்டது. அதில், தமிழில் சிறந்த மொழிபெயர்ப்புக்கான விருது கே.செல்லப்பனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ரவீந்திரநாத் தாகூரின் கோரா நாவலை தமிழில் மொழிபெயர்ப்பு செய்ததற்காக இந்த விருதை அவர் பெறுகிறார். அதேபோல், இந்தியில் திருக்குறளை மொழிபெயர்ப்பு செய்ததற்காக டி.இ.எஸ்.ராகவனுக்கு அளிக்கப்பட்டுள்ளது. கவிஞர் சல்மாவின் ‘இரண்டாம் ஜாமங்களின் கதை’ எனும் நாவலை மராத்தி மொழியில் மொழிபெயர்த்த சோனாலி நாவாங்கலுக்கும் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கே.செல்லப்பன் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர். 1936ம் ஆண்டு பிறந்த அவர், ஆங்கிலத் துறையில் பேராசிரியராகப் பணியாற்றியவர். மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற இவர், பல்வேறு நூல்களை எழுதியுள்ளார். சாகித்ய அகாடமி விருதுக்காக இவருக்கு ரூ.50 ஆயிரம்  பரிசுத் தொகையும், கேடயமும் வழங்கப்பட உள்ளது.

மூலக்கதை