இந்தியாவில் மட்டும் 10 கோடி ரசிகர்கள்: சினிமாவை மிஞ்சும் வெப் தொடர்

தினமலர்  தினமலர்
இந்தியாவில் மட்டும் 10 கோடி ரசிகர்கள்: சினிமாவை மிஞ்சும் வெப் தொடர்

தியேட்டர்களில் ஓடிடி தளத்தில் வெளியாகும் திரைப்படங்கள் அனைத்தையும் தாண்டி உலகையே ஒட்டு மொத்தமாக கட்டிப்போட்டிருக்கும் வெப் தொடர் மணி பீஸ்ட் (பணக் கொள்ளை). ஸ்பெயின் நாட்டின் ஸ்பானிஷ் மொழியில் அலெக்ஸ் ரோட்ரிகோ இயக்கிய இந்தத் தொடர், 2017ஆம் ஆண்டு ஆண்டெனா 3 என்ற ஸ்பெயின் தொலைக்காட்சி சேனலில் லா காஸா டி பாபெல் என்ற பெயரில் ஒளிபரப்பானது.

இந்த தொடர் ஸ்பெயினில் பெரிய வரவேற்பை பெற்றதும் அதை கவனித்த நெட்பிளிக்ஸ் நிறுவனம் அதனை அப்படியே கைப்பற்றி உலக மொழிகள் அனைத்திலும் வெளியிட்டது. உலகத்தின் கவனத்தை பெற்ற நிலையில் அதன் அடுத்தடுத்த சீசன்களை நெட்பிளிக்சே தயாரித்தது. ஹாலிவுட் திரைப்படங்களின் தரத்துக்கு கொஞ்சமும் குறைவில்லாமல் தயாரிக்கப்பட்ட இந்த தொடர் இன்றைக்கு உலகில் முதல் இடத்தை பிடித்துள்ளது.

ஒரு வங்கியைக் கொள்ளையடிக்கும் எட்டு கொள்ளையர்களையும், அவர்களை வெளியில் இருந்து வழிநடத்தும் புரபசரையும் மையப்படுத்திய கதை. அரசையும் ராணுவத்தையும் திண்டாட வைக்கும் புரபசரின் பிளான்கள் தான் சீரிசின் மிக முக்கியமான பகுதி. டோக்கியோ என்கிற பெண்ணின் பார்வையில் இருந்து சொல்லப்படும் இந்த சீரிஸில் முக்கிய அம்சம் என்னவென்றால் இந்த கொள்ளையகர்களை மக்களுக்கு பிடித்திருக்கிறது. காரணம் கொள்ளைக்கு அவர்கள் சொல்லும் காரணம்.

வங்கியை கொள்ளை அடித்து பணத்தை அள்ளிச் செல்லாமல் அவர்களே பணத்தை அச்சடித்து செல்வார்கள். தங்க வங்கியில் கொள்ளை அடித்து தங்கத்தை உருக்கி எடுத்துச் செல்வார்கள். யாரையும் கொலை செய்ய மாட்டார்கள், புரபசர் கேரக்டர் போலவே டெரர் போலீஸ் அதிகாரி அலீசாவின் கேரக்டரும் பாப்புலர்.

ஏற்கனவே 4 சீசன் முடிவடைந்த நிலையில், 5வது சீசனின் முதல் பகுதி கடந்த செப்டம்பர் 3ம் தேதி தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் வெளியானது. 5வது சீசனின் 2வது பகுதி டிசம்பர் 3ஆம் தேதி வெளியாகிறது.

தமிழ் சீரியல்களில் கேரக்டர்கள் சாகும்போது பெண்கள் அழுதது மாதிரி இந்த தொடரின் முக்கிய கேரக்டர்கள் சாகும்போதெல்லாம் ஆண்கள் அழுதார்கள். முந்தைய பாகத்தில் நைரோபி செத்தபோது உலகம் அழுதது. கடைசியாக சீரியலின் கதையை சொல்லி வரும் டோக்கியோ என்ற கேரக்டரின் மரணத்தோடு முடிந்திருக்கிறது. தற்போது டோக்கியோவின் மரணத்துக்காக உலகம் அழுது கொண்டிருக்கிறது. இறுதி பகுதியில் புரபசர் கேரக்டர் கொல்லப்படுமா? தப்பிப்பரா என்று தெரியும்.

தொடருக்கு வரவேற்பு பெருகி வருவதால் புரபசரை தப்பிக்கவிட்டு இன்னொரு சீசனை கொண்டு வரலாமா? அல்லது அவரை கொன்று சீசனை முடித்து விடலாமா என்று நெட்பிளிக்ஸ் நிறுவனம் யோசித்து வருகிறது. இந்த தொடருக்கு உலகம் முழுக்க 100 கோடிக்கும் அதிகமான ரசிகர்கள் இருப்பதாகவும், இந்தியாவில் மட்டும் 10 கோடி ரசிகர்கள் இருப்பதாகவும் சமீபத்திய புள்ளி விபரம் ஒன்று தெரிவிக்கிறது.

இதன் 5வது பகுதி சமீபத்தில் வெளியிடப்பட்டபோது ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரை தலைமையிடமா கொண்டு இயங்கும் வெர்வ் லாஜிக் என்ற நிறுவனம் வெப் சீரிஸை தங்களது ஊழியர்கள் பார்ப்பதற்கு ஏதுவாக விடுமுறை அறிவித்தது குறிப்பிடத்தக்கது. இப்போது இறுதி பகுதிக்கு உலகமே காத்துக் கிடக்கிறது.

மூலக்கதை