மீண்டும் மிரட்டல் கொச்சி கப்பல் கட்டும் ஆலையை தகர்ப்போம்
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கொச்சியில் கப்பல் கட்டும் தொழிற்சாலை உள்ளது. இங்கு இந்திய கடற்படைக்கு தேவையான போர் கப்பல்கள் உருவாக்கப்படுகின்றன. தற்போது இங்கு ஐஎன்எஸ் விக்ராந்த் என்ற விமானம் தாங்கி போர் கப்பல் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதன் இறுதி கட்ட பணிகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் கடந்த 24ம் தேதி கப்பல் கட்டும் தொழிற்சாலைக்கு இமெயில் மூலம் ஒரு மிரட்டல் வந்தது. அதில் ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலையும், தொழிற்சாலையையும் வெடிகுண்டு வைத்து தகர்ப்போம் என குறிப்பிடப்பட்டிருந்தது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். இந்நிலையில் நேற்று மீண்டும் ஒரு மிரட்டல் இமெயில் வந்துள்ளது. அதில் எரிபொருள் டேங்கர் லாரியை பயன்படுத்தி கப்பல் தொழிற்சாலையை தகர்ப்போம் என குறிப்பிடப்பட்டிருந்தது. இது குறித்து அதிகாரிகள் போலீசில் புகார் அளித்தனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். கப்பல் தொழிற்சாலைக்கு அடுத்தடுத்து வெடிகுண்டு மிரட்டல் வந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.