5வது டெஸ்ட் ரத்துக்கு காரணம் என்ன?.. கங்குலி விளக்கம்

தினகரன்  தினகரன்
5வது டெஸ்ட் ரத்துக்கு காரணம் என்ன?.. கங்குலி விளக்கம்

மும்பை: இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ரத்து செய்யப்பட்டது. இந்திய அணியின் பயிற்சியாளர்கள் 3 பேருக்கும், உதவி பிசியோதெரபிஸ்டுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் இந்த டெஸ்ட் ரத்து செய்யப்பட்டது. ரத்தான இந்த டெஸ்ட் பின்னர் நடைபெறும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் ஐக்கிய அரபு அமீரகத்தில் வருகிற 19-ந் தேதி தொடங்கும் ஐ.பி.எல். தொடரின் எஞ்சிய ஆட்டத்தை கருத்தில் கொண்டு தான் இந்திய அணி கடைசி டெஸ்டில் விளையாட மறுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரத்தில் அதிருப்தி அடைந்து இருக்கும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலையிட்டு உறுதியான முடிவு எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து இருக்கிறது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி அளித்த பேட்டியில், ‘`கடைசி டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டதற்கு ஐ.பி.எல். போட்டி எந்த வகையிலும் காரணம் கிடையாது. அணியின் உதவி பிசியோதெரபிஸ்ட் யோகேஷ் பார்மருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் இந்திய வீரர்கள் அச்சம் அடைந்தனர். பிசியோதெரபிஸ்டுடன் நெருங்கி பழகியதால் தங்களுக்கு பாதிப்பு ஏற்படுமோ? என்று கலக்கம் அடைந்த வீரர்கள் களம் இறங்க மறுத்தனர். இதனால் அவர்கள் மீது குற்றம் சுமத்த முடியாது. அவர்களது உணர்வுக்கு நீங்கள் மதிப்பளிக்க வேண்டும். இந்திய கிரிக்கெட் வாரியம் ஒருபோதும் பொறுப்பற்ற முறையில் செயல்படாது. மற்ற நாட்டு கிரிக்கெட் வாரியங்களின் நலனையும் நாங்கள் மதிக்கிறோம். ரத்து செய்யப்பட்ட டெஸ்டை தனி போட்டியாக கருதாமல் இங்கிலாந்து தொடரின் 5-வது மற்றும் கடைசி போட்டியாக நடத்தவே நாங்கள் விரும்புகிறோம்’’ என்று தெரிவித்தார்.

மூலக்கதை