நஷ்ட கணக்கு காட்டி ஏமாற்றினாரா? 10 ஆண்டாக வருமான வரி கட்டாத டிரம்ப்: நியூயார்க் டைம்ஸ் செய்தியால் பரபரப்பு

தினகரன்  தினகரன்
நஷ்ட கணக்கு காட்டி ஏமாற்றினாரா? 10 ஆண்டாக வருமான வரி கட்டாத டிரம்ப்: நியூயார்க் டைம்ஸ் செய்தியால் பரபரப்பு

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த 15 ஆண்டுகளில் 10 ஆண்டுகளுக்கு வருமான வரி கட்டவில்லை என்றும், தனது நிறுவனம் நஷ்டத்தில் இயங்குவதாக கணக்கு காட்டி வரி கட்டாமல் தப்பியதாகவும் நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவில் வரும் நவம்பரில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து அங்கு பிரச்சாரம் தீவிரம் அடைந்து வருகின்றது. அதிபர் டொனால்ட் டிரம்ப் இரண்டாவது முறையாக குடியரசு கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பிடென் போட்டியிடுகின்றார். இந்நிலையில் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு கடந்த 2017ம் ஆண்டில் அதிபர் டிரம்ப் ரூ.56,250 மட்டுமே வருமான வரியாக செலுத்தியதாக நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது. அதே நேரத்தில் அந்த ஆண்டு இந்தியாவில் செயல்பட்டு வரும் அதிபர் டிரம்புக்கு சொந்தமான நிறுவனங்கள் சுமார் ரூ.1 கோடி வருமான வரிசெலுத்தி உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. அதிபராக பொறுப்பேற்ற இரண்டு ஆண்டுகளில் டிரம்பின் வருமானம் குறித்த அறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஸ்காட்லாந்து மற்றும் அயர்லாந்தில் உள்ள கோல்ப் மைதானம் மூலமாக ரூ.547 கோடி வருமானம் ஈட்டியுள்ளார். பிலிப்பைன்சில் உள்ள நிறுவனத்திடம் இருந்து ரூ.22.5 கோடியும், இந்தியாவில் இருந்து ரூ.17 கோடியும், துருக்கியில் இருந்து ரூ.7.5 கோடியும்வருமானமாக வந்துள்ளது. 2017ம் ஆண்டில் அமெரிக்காவில் ரூ.56,250 மட்டுமே அதிபர் டிரம்ப் வருமான வரியாக செலுத்தியுள்ளார். ஆனால் வெளிநாடுகளில் உள்ள அதிபருக்கு சொந்தமான நிறுவனங்கள் பல ஆயிரம் டாலர்களை வருமான வரியாக செலுத்தியுள்ளன. பனாமா நாட்டில் ரூ.12 லட்சம், இந்தியாவில் ரூ.1 கோடி, பிலிப்பைன்சில் ரூ.1.15 கோடி வருமான வரியாக செலுத்தப்பட்டுள்ளது. மேலும் கடந்த 15 ஆண்டுகளில் 10 ஆண்டுகளுக்கு டொனால்ட் டிரம்ப் வருமான வரி செலுத்தவில்லை. வருமானத்தை விட தனக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதாக தான் அவர் கணக்கு காட்டி வந்துள்ளதாகவும் நியூயார்க் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது. டிரம்ப்-பிடென் இடையே முதல்முறையாக இன்று நேரடி விவாத நிகழ்ச்சி நடைபெற உள்ள நிலையில் இந்த விவகாரம் அமெரிக்க அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.* டிக்டாக் தடைக்கு தடைஅமெரிக்காவில் சீன நிறுவனத்தின் செயலியான டிக்டாக் பொதுமக்களின் தனிப்பட்ட தரவுகளை திருடுவதாகவும், நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் கூறி அந்த செயலியின் பயன்பாட்டுக்கு  தடை விதித்து அதிபர் டிரம்ப் சமீபத்தில் உத்தரவிட்டார்.இது தொடர்பான வழக்கு வாஷிங்டன் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கார்ல் நிக்கோலஸ் அதிபர் டிரம்ப் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தார்.  நவம்பரில் அதிபர் தேர்தல் முடிவுகளுக்கு பின்னரே டிக்டாக் குறித்த முடிவு எடுக்க முடியும் என்ற சூழல் ஏற்பட்டுள்ளது.* சுத்த பொய்நியூயார்க் டைம்ஸ் தகவலை அதிபர் டிரம்ப் மறுத்துள்ளார். நேற்று முன்தினம் செய்தியாளர்களை சந்தித்த அவர், ‘‘இது பொய்யான செய்தி, பொய்யாக உருவாக்கப்பட்டது. இதுபோன்ற கதைகளை ஏற்கனவே கேட்டுள்ளோம். 4 ஆண்டுகளுக்கு முன்பு இதே கேள்வியை என்னிடம் கேட்டீர்கள். நான் பதிலளித்துவிட்டேன். நான் அனைத்து வரிகளையும் செலுத்தியுள்ளேன். ஏராளமான மாநில வரிகளை செலுத்தியுள்ளேன். வருமான வரி அறிக்கைகளை தணிக்கை முடிந்தபின்னர் பார்க்கலாம்” என்றார்.

மூலக்கதை