எந்தவித நிபந்தனையும் இல்லாமல் வடகொரிய அதிபர் கிம் ஜாங்கை சந்திக்கத் தயார்: ஜப்பான் பிரதமர் சுகா பேச்சு

தினகரன்  தினகரன்
எந்தவித நிபந்தனையும் இல்லாமல் வடகொரிய அதிபர் கிம் ஜாங்கை சந்திக்கத் தயார்: ஜப்பான் பிரதமர் சுகா பேச்சு

ஜப்பான்: எந்தவித நிபந்தனையும் இல்லாமல் வடகொரிய அதிபர் கிம் ஜாங்கை சந்திக்கத் தயாராக இருப்பதாக ஜப்பான் பிரதமர் யோஷிஹிடே சுகா தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஐக்கிய நாடுகள் சபையின் 75-வது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்ற ஜப்பான் பிரதமர் யோஷிஹிடே சுகா கூறுகையில், ஜப்பான் பிரதமராக எந்தவித நிபந்தனையும் இல்லாமல் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னைச் சந்திக்கத் தயாராக இருக்கிறேன். வடகொரியாவுடனான உறவை இயல்பாக்க ஜப்பான் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இருக்கும். இந்தச் சந்திப்பு இரு நாட்டு உறவுகளுக்கு மட்டுமல்லாமல் பிராந்திய அமைதிக்கும் உதவும். இதற்கான நடவடிக்கையை நான் எடுப்பேன் என ஜப்பான் பிரதமர் கூறினார். கடந்த ஆண்டு அக்டோபர் 31 ஆம் தேதி வடகொரியா ஏவுகணைச் சோதனைகளை நடத்தியது. வடகொரியாவின் இந்த ஏவுகணைச் சோதனைகளை ஆசியாவின் ஜப்பான் உச்சி மாநாட்டில் ஜப்பான் கடுமையாக விமர்சித்தது. இதனைத் தொடர்ந்து ஜப்பானுடன் கடுமையான மோதல் போக்கை வடகொரியா கடைப்பிடித்தது. இந்நிலையில், உடல் நிலையைக் காரணம் காட்டி பிரதமர் பதவியிலிருந்து விலகுவதாக ஷின்சோ அபே அறிவித்தார். இதனைத் தொடர்ந்து ஜப்பானின் ஆளும் கட்சியான லிபரல் டெமாக்ரடிக் கட்சி, அடுத்த பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்கான பொதுக்குழுவை செப்டம்பர் 1 ஆம் தேதி கூட்டியது. இதனைத் தொடர்ந்து கட்சியின் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. இதில் ஷின்சோ அபேவின் அமைச்சரவையில் மூத்த அமைச்சராக இருக்கும் யோஷிஹிடே சுகா வெற்றி பெற்று கடந்த 15 ஆம் தேதி ஜப்பான் பிரதமராகப் பதவி ஏற்றார். பதவி ஏற்றது முதல் சர்வதேச நாடுகளுடான உறவைப் பலப்படுத்துவதில் ஆர்வம் காட்டி வருகிறார் சுகா.

மூலக்கதை